Close
மார்ச் 7, 2026 1:26 மணி

ஜப்பானின் கோள வடிவ சோலார் பேனல்கள்: சூரிய ஆற்றல் புரட்சி

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, சோலார் பேனல்கள் என்றாலே அவை தட்டையாகத்தான் இருக்க வேண்டும் என்ற விதி இருந்து வந்தது. ஆனால், ஜப்பான் அந்த விதியை உடைத்து மீண்டும் ஒரு சாதனையைப் படைத்துள்ளது. கியோசெமி நிறுவனத்தின் ஸ்பெலர் தொழில்நுட்பம், “சோலார் பேனல்கள் ஏன் தட்டையாக இருக்க வேண்டும்?” என்ற கேள்வியை முன்வைத்து, அவை கோள வடிவிலும் சிறப்பாகச் செயல்படும் என்பதை நிரூபித்துள்ளது.

1883-ல் சார்லஸ் ஃபிரிட்ஸ் முதன்முதலில் சோலார் பேனல்களை உருவாக்கியபோது, அவை தட்டையான உலோகத் தகடுகளின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்பட்டன. சூரிய ஒளி நிலையாக ஒரே திசையில் விழும் இடங்களுக்கு இந்த தட்டையான வடிவம் பொருத்தமானது. ஆனால், நடைமுறையில் சூரியன் நகர்ந்து கொண்டே இருப்பதால், தட்டையான பேனல்களால் நாள் முழுவதும் முழுமையான ஆற்றலைச் சேமிக்க முடிவதில்லை.

இந்தக் குறையை சரிசெய்ய கியோசெமி நிறுவனத்தின் நிறுவனர்  நகாடா, சோலார் பேனல்களை ஏன் கோள வடிவில் உருவாக்கக்கூடாது என்று சிந்திக்கத் தொடங்கினார்.

ஆய்வகச் சோதனைகளின்படி, சூரிய ஒளி என்பது ஒரு திசையில் இருந்து மட்டும் வருவதில்லை; அது எல்லா திசைகளிலும் சிதறிப் பரவுகிறது. எனவே, ஒரு தட்டையான பேனலை விட, கோள வடிவ பேனல் அனைத்து கோணங்களிலிருந்தும் வரும் ஒளியை மிகத் திறமையாக உள்வாங்க முடியும் என்பதை நகாடா உணர்ந்தார்.

இதற்காக ஜப்பானின் நுண் ஈர்ப்பு மையமான ஜப்பான் மைக்ரோக்ராவிடி சென்டரில் விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கைவிடப்பட்ட ஒரு சுரங்கப்பாதையை 710 மீட்டர் ஆழமுள்ள ஆராய்ச்சித் தளமாக மாற்றி, அங்கு சோதனைகள் செய்யப்பட்டன.

கோள வடிவ செல்களை உருவாக்கிய விதம்

உருகிய நிலையில் இருக்கும் சிலிக்கானை புவிஈர்ப்பு விசை இல்லாத சூழலில்  வைத்தால், அது ஒரு சரியான கோள வடிவத்தைப் பெறும். இதைச் சோதிக்க, சிலிக்கானை ஒரு வாக்வம் காப்ஸ்யூல் ஒன்றில் அடைத்து, 500 மீட்டர் ஆழமுள்ள சுரங்கப்பாதையில் மேலிருந்து கீழே விழச் செய்தனர். அந்தச் சில நொடிகள் நிலவிய புவிஈர்ப்பு இல்லாத சூழலில், சிலிக்கான் உருகி, மீண்டும் குளிர்ந்து ஒரு மென்மையான கோள வடிவத்தைப் பெற்றது.

ஆரம்பத்தில் இது சவாலாக இருந்தாலும், கியோசெமி நிறுவன இஞ்சினியர்களர்களின் விடாமுயற்சியால், வளைந்த மேற்பரப்பிலும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. இந்தச் சிறிய கோளங்கள் வரிசையாக இணைக்கப்பட்டு மின்சாரத்தை உருவாக்கத் தொடங்கின.

1998-ல் கியோசெமி நிறுவனம் தனது சொந்த நுண் ஈர்ப்பு ஆய்வகத்தைத் தொடங்கி, “ஸ்பெரிக்கல் சோலார்” என்பதன் சுருக்கமான “ஸ்பெலர்” என்ற பெயரில் இந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் பலரும் இந்த வித்தியாசமான வடிவத்தைக் கண்டு தயங்கினாலும், அதன் செயல்திறனைக் கண்டு வியந்தனர்.

ஜப்பானின் இந்த முயற்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஒரு மைல்கல்லாகும். ஒரு பழைய நடைமுறையைத் தகர்த்து, ஆர்வமும் கேள்விகளும் இருந்தால் புதிய மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதை நகாடா உலகுக்கு நிரூபித்துள்ளார்.

தட்டையான பேனல்களின் காலம் முடிந்து, அனைத்து திசைகளிலிருந்தும் ஆற்றலைச் சேமிக்கும் கோள வடிவ பேனல்களின் காலம் இப்போது தொடங்கிவிட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top