Close
செப்டம்பர் 20, 2024 9:42 காலை

இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை அளிப்பவர்களாக மாற வேண்டும்: வேளாளர் கல்லூரி தாளாளர் பேச்சு

ஈரோடு

வேளாளர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் ஸ்டார்ட் அப் திட்டத்தை தொடக்கிவைத்தார் அக்கல்லூரியின் தாளாளர் எஸ்டி சந்திரசேகர் உள்ளிட்டோர்

இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை அளிப்பவர்களாக மாற வேண்டும் என்று ஈரோடு வேளாளர் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் எஸ்.டி. சந்திரசேகர் அறிவுறுத்தினார்.

ஈரோடு வேளாளர் கலை அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்ற தமிழக அரசின் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு என்ற தொழில் முனைவோர்களுக்கான ஈரோடு பிரிவின் சார்பில் 27 புதிய தயாரிப்புகளின் அறிமுக விழாவில்  அக்கல்லூரி தாளாளர் எஸ்.டி. சந்திரசேகர் மேலும் பேசியதாவது:

புத்தாக்க சிந்தனையோடு இயங்கும் நிறுவனங்கள், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வாய்ப்புள்ள நிறுவனங்கள், சமூகத்தில் நன்மாற்றங்களை ஏற்படுத்தும் விதமாக இயங்கும் நிறுவனங்கள் ஆகியவை இந்த மானிய நிதிக்காக விண்ணப்பிக்கலாம்.

தமிழ் நாடு புத்தொழில் ஆதார நிதி (TANSEED) யின்  இந்த ஆதார மானிய நிதி திட்டமானது தமிழ் நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க மையத்தின் (Tamil Nadu Startup and Innovation Mission) செறிவார்ந்த முன்னெடுப்பு ஆகும்.

புத்தாக்க சிந்தனையோடு இயங்கும் தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு (STARTUPS) மானிய நிதியாக 10 லட்சம் ரூபாய் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி திட்டத்தின் கீழ் 100 புத்தொழில் நிறுவனங்கள் (ஸ்டார்ட்- அப் ) இந்த ஆண்டு பயன்பெறும் என்றும், 100 நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் வீதம் மொத்தம் 10 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டு இருக்கிறது

தற்போது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உள்ளது. நமது நாட்டிலேயே தொழில் வளம் அதிகம் உள்ளது அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம். எனவே படித்த இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைத்தேடி செல்லாமல் நமது நாட்டில் புதிய தொழில்களை உருவாக்கவேண்டும். இதற்கு மத்திய மாநில அரசுகளின் ஸ்டார்ட் ஆப் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் ஊக்கமளிக்கப்படுகிறது. அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

ஸ்டார்ட் அப் தமிழ்நாடு பிரிவின் அசோசியேட் துணைத் தலைவர் சிவக்குமார் பேசுகையில், வேளாண் மானிய கோரிக்கையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க மாநில அரசு ரூபாய் 10 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யும் இயந்திரம், பனைமரம் ஏற உதவும் இயந்திரம், காய்கறிகள் பழங்கள்  நீடித்த நாட்கள் இருக்கும் தொழில்நுட்பம், மண்ணின் வளம் மற்றும் வேளாண் பொருள்களின் தன்மையை நிலத்திலேயே கண்டறியும் பரிசோதனை கருவி ஆகியவைகளை உருவாக்க இளைஞர்கள் முன்வந்து அந்த மானியத்தை பெறலாம் என்றார்.

அசோசியேட் துணை தலைவர் எஸ் தினேஷ்குமார் 7 ஸ்டார்ட் அப் சமூக குழுக்களை துவக்கி வைத்து பேசுகையில், மார்ச் மாதத்துக்குள் தமிழகம் முழுவதும் 75 குழுக்கள் உருவாக்கப்படும் என்றார்.

இதைத் தொடர்ந்து   நம்பீசன் பால் நிறுவன மேலாண்இயக்குனர் விவேக் நம்பிசன், ஈரோடு பிரிவு ஸ்டார்ட் அப் திட்ட அலுவலர் சக்திவேல், இந்திய தொழில் கூட்டமைப்பு யங் இந்தியா அமைப்பின் ஈரோடு பிரிவு தலைவர் குமாரவேல்,தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா மற்றும் தொழிலதிபர்கள் தீபா முத்துக்குமாரசாமி, ராமமூர்த்தி, சுந்தரம் மகாலிங்கம்  ஆகியோர் பேசினர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top