Close
செப்டம்பர் 19, 2024 11:14 மணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் 35,621 உறுப்பினர்களின் ரூ.114.28 கோடி மதிப்பிலான நகைக் கடன்கள் தள்ளுபடி: அமைச்சர் ரகுபதி தகவல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய சட்ட அமைச்சர் ரகுபதி. உடன் ஆட்சியர் கவிதாராமு.

புதுக்கோட்டை மாவட்டத்தில்  69 -ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் சிறந்த சங்கங்களுக்கு பாராட்டு கேடயம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம், கூட்டுறவுத்துறையின் சார்பில், 69 -ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா புதுக்கோட்டை நகராட்சி பகுதிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் இன்று (16.11.2022) நடைபெற்ற  விழாவில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் சட்ட அமைச்சர்  ரகுபதி பேசியதாவது:  தமிழ்நாடு முதலமைச்சர்  கூட்டுறவுத்துறையின் மூலம் பல்வேறு நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 35,621 உறுப்பினர்களின் ரூ.114.28 கோடி மதிப்பிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 2,873 சுயஉதவிக்குழுக்களைச் சார்ந்த 32,924 உறுப்பினர்களுக்கு ரூ.52.22 கோடிக்கு தள்ளுபடி செய்வதற்கு தணிக்கைத் துறையின் ஆய்வு நிறைவடைந்தவுடன் சுயஉதவிக்குழு கடன் உறுப்பினர்களுக்கு தள்ளுபடி சான்றிதழ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் கூட்டுறவு கடன் சங்கங்கள் நமது அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்காற்றி வருகின்றன. இதன்மூலம் பல்வேறு வகையான கடன் உதவிகள் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு தொழில் முனைவோர்களாக உருவாகியுள்ளார்.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெண்கள் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் அதிக அளவில் கடன் உதவி பெற்று இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கும் வகையில் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் நமது குடும்பமும், நாடும் பொருளாதாரத்தில் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கின்றனர்.

எனவே கூட்டுறவுத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை பொதுமக்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் அனைவரும் முறையான வகையில் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

மாவட்ட அளவிலான சிறந்த சங்கங்களுக்கு பாராட்டு கேடயம் மற்றும் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள், கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் வினாடி வினாப் போட்டி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார்.

கூட்டுறவு வார விழாவில், மகளிர் சுயஉதவிக்குழுக்கடன், பயிர்க்கடன், விவசாய கூட்டுப் பொறுப்பு குழுக் கடன், கால்நடை வளர்ப்பு மூலதனக் கடன், மத்திய காலக் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் கடன்.

விழாவில், சிறுவணிகக் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், குறு சிறு நடுத்தர தொழில் புரிவோர் கடன், கூட்டுறவு சிக்கண நாணய சங்க கடன், தனிநபர் சம்பளக்கடன், பணி புரியும் மகளிர் கடன், பண்ணைச் சாராக் கடன், வீடு அடமானக் கடன், வீட்டுவசதிக் கடன் உள்ளிட்ட ரூ.25,11,45,550 – மதிப்பிலான கடன் உதவிகள் 5,435 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

இதில், முன்னாள் அரசு வழக்கறிஞர்கே.கே.செல்லப்பாண்டி யன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திரபிரசாத், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநர் மு.தனலெட்சுமி, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, நகர்மன்ற துணைத் தலைவர் எம்.லியாகத்அலி, துணை பதிவாளர் அப்துல் சலீம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top