Close
செப்டம்பர் 20, 2024 3:41 காலை

நலவாரிய உறுப்பினர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கக் கோரிக்கை

கரூர்

கரூர் மாவட்டம், பரமத்தியில் நடைபெற்ற கோயில் பூசாரிகள் நலச்சங்க கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு படிவம் வழங்கிய மாநிலத்தலைவர் பி. வாசு

நலவாரிய உறுப்பினர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கக் கோரிக்கை கோயில் பூசாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சேலத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச் சங்கதின் கரூர் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் , பூசாரிகள் கூட்டம் கரூர் மாவட்டம் பரமத்தி அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவரும் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் பூசாரிகள் ஓய்வூதிய தேர்வுகுழு உறுப்பினருமான பி. வாசு   தலைமை வகித்தார்.

கரூர் மேற்கு மாவட்ட தலைவர் எஸ். கதிர்வேல் ,கரூர் கிழக்கு மாவட்ட தலைவர் ஆர். சுப்பிரமணி, கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கரூர் மாவட்ட செயலாளர் சந்திரசேகர் தீர்மானங்களை வாசித்தார்.

இக்கூட்டத்தில்  மாநில தலைவர் பி. வாசு பேசியது:  மாத ஊதியம் இல்லாமல் பணியாற்றிய 15 ஆயிரம் திருக்கோவில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை ரூ.1000 வழங்கி முதிய பூசாரிகள் ஓய்வூதியம் மாதம் ரூ.3000 தில் இருந்து ரூ. 4000 ஆக உயர்த்தியும், ஒரு கால பூஜை வைப்பு நிதி ரூ 2 லட்சமாக உயர்த்தி கிராம கோவில் பூசாரிகளுக்கு ஏற்ற ஆன்மீக அரசாக திராவிட மாடல் திமுக அரசு தான் என்று பூசாரிகள் உணர்ந்துள்ளனர். காசி ஆன்மிக யாத்திரைக்கு 200 பேருக்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பூசாரிகள் நல வாரியத்தை செயல்படுத்தி பல ஆண்டுகளாக நலத்திட்டம் வேண்டிய விண்ணப்பித்துள்ள வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்டம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும் .

கடந்த 2010 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சியில் பூசாரிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. அந்த மிதிவண்டி வழங்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு மேலாகிறது.  பழுதடைந்த மிதிவண்டியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை பூசாரிகள் சிரிப்பில் இறைவனை காணும் தமிழக முதல்வர்  புதிய மிதிவண்டி அல்லது இருசக்கர வாகனங்களை விலை இல்லாமல் பூசாரிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக தேர்தல் அறிக்கையில் கிராம கோவில் பூசாரிகள் நல வாரிய உறுப்பினர்களுக்கு மாதம் ரூ.2000 ஊதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வரும் நிதி ஆண்டில் செயல்படுத்த வேண்டும்.

மேலும் இந்த சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராம கோவில்களில் பணியாற்றும் பூசாரிகள் பூசாரிகள் மேம்பாட்டு நிதிக்காக பூசாரிகள் பயன்பெறும் வகையில் பெரிய திருக்கோவில்களில் அன்னதானத் திட்டத்திற்கு என்று தனி உண்டியல் நிறுவப்பட்டது.

அதைப்போல் பூசாரிகள் நலன் காக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள  ஒவ்வொரு திருக்கோவிலிலும் தனி உண்டியல் நிறுவப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..

மேலும் இக்கூட்டத்தில் ஏராளமான பெண் பூசாரிகள் கலந்து கொண்டனர் கலந்துகொண்ட பூசாரிகளுக்கு  புதிய உறுப்பினர் அடையாள அட்டை  வழங்கப்பட்டது. மேலும் முதிய பூசாரிகளுக்கு ஓய்வூதிய விண்ணப்பம் மற்றும் பூசாரிகள் நலவாரியதில் உறுப்பினர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top