Close
செப்டம்பர் 20, 2024 3:57 காலை

புதுக்கோட்டை அருள்மிகு சாந்தநாதர் திருக்கோயிலில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா

புதுக்கோட்டை

புதுகை சாந்தநாதர் கோவிலில் நடைபெற்ற பஞ்சமூர்த்திகள் உலா

புதுக்கோட்டை அருள்மிகு சாந்தநாதர் திருக்கோயிலில் மார்கழி மாத  அஷ்டமி நாளை முன்னிட்டு  பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் கி.பி. 1071-1123 இல் ஆண்ட முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மூலவர் சந்நிதியின் மேல் விதானத்தில் காணப்படுகின்ற கல்வெட்டில் இக்கோயில் குலோத்துங்க சோழீச்சரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிற்காலத்தில் இக்கோயில் சார்ந்தாரைக் காத்த நாயனார் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

கோயிலை ஒட்டியுள்ள பல்லவன் குளத்தின் தென்கரையில் ஆஞ்சநேயர் சந்நிதி  உள்ளது. பெரிய ஆஞ்சநேயர், சிறிய ஆஞ்சநேயர் என இரண்டு விக்ரஹங்கள் உள்ளன. தொடர்ந்து 12 சனிக்கிழமைகளில் துளசி மாலை சார்த்தினால் நினைத் தது நிறைவேறும். வடைமாலை சார்த்தி வழிபடுவோ ருக்கு சனி தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் இந்த சிவனை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்கும் என்பது ஐதீகம் சுவாமிக்கு எதிரில் ருத்ராட்ச பந்தலின் கீழ் நந்தீஸ்வரர் வீற்றிருக்கிறார். நான்கு வேதங்களுக்கும் தலைவியாக விளங்கும் அம்பிகை ‘வேதநாயகி’ என்னும் பெயரில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். கல்விக்கடவுளாக திகழும் இந்த அம்மனை மாணவர்கள் வியாழக்கிழமை வழிபடுவது  வழக்கம்.

காசி ராமேஸ்வரம்: காசி விஸ்வநாதர் – விசாலாட்சி, ராமேஸ்வரம் ராமநாதர்– பர்வதவர்த்தினிக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள பல்லவன் குளக்கரையில் அமாவாசையன்று முன்னோருக்கு தர்ப்பணம் செய்து தீபமேற்றி வழிபட்டால் பிதுர் தோஷம், முன்வினை பாவம் தீரும். கோயிலை அடுத்துள்ள பல்லவன் குளம் காசியில் பாயும் கங்கை தீர்த்தமாக கருதப்படுகிறது. இதனடிப்படை யில் இங்கு வழிபடுவோருக்கு ஒருசேர காசி, ராமேஸ்வர யாத்திரை செய்த புண்ணியபலன் கிடைக்கும்.

ராகுகால துர்க்கை: பிரகாரத்திலுள்ள துர்க்கை சந்நிதியில் செவ்வாய், வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் விளக்கேற்றி குங்கும அர்ச்சனை செய்ய திருமணத்தடை நீங்கும். இங்குள்ள சர்க்கரை விநாயகருக்கு பக்தர்கள் தங்களின் கைகளால் சர்க்கரை அபிஷேகம் செய்ய கடன் பிரச்னை தீரும். தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு பூசணி தீபம் ஏற்ற கிரக தோஷம் நீங்கும். அறுபத்து மூவர் சந்நிதியில் சிவன் ‘காட்சி கொடுத்த நாயனார்’ என்னும் பெயரில் ரிஷபத்தின் மீது காட்சியளிக்கிறார்

கோவில் விழாக்கள்..  ஆனி பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரம், சம்பக சஷ்டி, தைப்பூசம், மாசிமகத்தன்று தெப்பம், மாசி வளர்பிறை திரயோதசி திதியன்று மகா பிரதோஷ விழா சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு வழிபடுவோருக்கு ஒரு சேர காசி ராமேஸ்வர யாத்திரை செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top