Close
செப்டம்பர் 20, 2024 3:46 காலை

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நிகழாண்டில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்ற தமிழகத்தின் முதவ் ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிப்பாய்ந்த காளை

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு  கோலாகலமாக தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் உள்ள புனித அடைக்கல மாதா அன்னை தேவாலயம் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக ஜல்லிக்கட்டு  ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இது தமிழகத்தில் நடத்தப்படும் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியாகும்.

தமிழக அரசும் இங்கு ஜல்லிக்கட்டு நடத்த  ஒப்புதல் அளித்து, கடந்த 6ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம் என அரசாணை வெளியிடப்பட்டது.  ஆனால்,  பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக  அந்தத்தேதியில் நடத்த திட்டமிட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டி மாவட்ட நிர்வாகத்தால் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியல் தர்ணா உள்ளிட்ட பலவகை போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து  அரசின் வழிகாட்டுதலின்படி,, ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் இரட்டை  இரும்பு தடுப்புகள்  அமைக்கும் பணி, மேடை சரி செய்யும் பணி, வாடிவாசலை ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களைக் கொண்டு சமப்படுத்தி  தேங்காய் நார் மூலம் தளம் அமைத்தல் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் இரவு பகலாக நடைபெற்றது.

தேவாலயத்தின் அருகே வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் காளைகள் வரிசையாக அனுமதிக்கப்படும் இடத்தில் காளைகள் மீது வெயில் படாமல் இருப்பதற்காக திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்கள் காயமடைவதை தவிர்க்க, ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் கூடுதலாக தேங்காய் நார்கள் கொட்டப்பட்டன பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் முறையாக நிறைவடைந்த நிலையில், ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் இன்று(ஜன.8) தொடங்கியுள்ளது.

இதனையொட்டி  மாடுபிடி வீரர்களும், உரிமையாளர்களுடன் மாடுகளும்  தச்சங்குறிச்சி கிராமத்தில்  நேற்று இரவு முதலே குவிந்த் தொடங்கினர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளை மாடுகள் வந்து சேர்ந்தன. ஆன் லைன் மூலம் சுமார் ஐநூறு காளைகளுக்க டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது.  ஏற்கெனவே மருத்துவ குழுவினர் தச்சங்குறிச்சி பகுதிக்கு வந்து ஜல்லிக்கட்டில் பங்கேற்க முன்பதிவு செய்து இருந்த மாடுபிடி வீரர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இதேபோல் காளைகளை அழைத்து வரக்கூடிய உரிமையாளர்கள் தரப்பில் 2 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பாரம்பரிய முறைப்படி முதலில் வாடி வாசல் வழியாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு முதல் மரியாதை செய்யப்பட்டது. பின்பு வீரர்கள் அனைவரும் ஜல்லிகட்டு விதிமுறைகளை பின்பற்றுவதாக உறுதிமொழி ஏற்றனர். அதைதொடர்ந்து, அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்யநாதன், ஆட்சியர் கவிதாராமு, புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் வை. முத்துராஜா, கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை, வடக்கு மாவட்ட திமுக செயலர் கே.கே. செல்லப்பாண்டியன்  ஆகியோர் கொடியசைத்து நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து, வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் மடக்கி பிடித்து திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மேற்பார்வையில், ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 400 -க்கும் அதிகமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். கால்நடை மருத்துவ குழுவினர், முதல் உதவி மருத்துவ சிகிச்சை குழுவினர், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் தயார்நிலையில் உள்ளனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500 காளைகளும், 320 காளையர்களும் பங்கேற்றுள்ளதாக ஜல்லிக்கட்டு விழா குழுவினர் தெரிவித்தனர். நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை காண, முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட  சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர்  கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top