Close
செப்டம்பர் 20, 2024 8:54 காலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… ஈரோடு வாக்காளர்களுக்கு பொருள், பணம் கொடுக்கக்கூடாது: தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

ஈரோடு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி

ஈரோடு வாக்காளர்களுக்கு பொருள், பணம் கொடுக்கக்கூடாது என்று ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகள் இதுகுறித்து ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள  தகவல்::

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் நடத்தை விதிகள் அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு தேர்தலை சுதந்திரமாகவும் மற்றும் நியாயமாகவும் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அனைத்து சட்ட பாதுகாப்புகளும் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான கடந்த 18-ந்தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எந்தக்கட்சியும் அல்லது வேட்பாளரும், எந்த ஒரு சமய அல்லது மொழி, சாதியினரிடையே வேறுபாடுகளை தூண்டும் வகையில் எந்த வேண்டுகோளையும் விடுக்கக்கூடாது.

வுழிபாட்டிற்குரிய கோவில், மசூதி, தேவாலயம், குருத்துவாராக்கள் அல்லது பிறவழிபாட்டு தலங்களில் தேர்தல் குறித்த பிரசாரம் மற்றும் சுவரொட்டிகள் மற்றும் பாடல்கள் இசைத்தல் ஆகியவை செய்தல் கூடாது. பொதுவாக பள்ளிக்கூடங்கள், கல்லூரி வளாகங்களில் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை. பள்ளிக்கூடம், கல்லூரி நிர்வாகத்தினர் அனுமதி அளிக்கும் பட்சத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதியுடன், பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரியின் அன்றாட பணிகளுக்கு குந்தகம் விளைவிக்காமல் பொதுக்கூட்டம் நடத்தலாம்.

வாக்காளர்களுக்கு பொருள், பணம் கொடுத்தல், வாக்காளர்களை மிரட்டுதல், ஆள் மாறாட்டம் செய்தல், வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் வாக்காளர்களுடைய ஆதரவைக்கோருதல், வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தோடு முடிகிற 48 மணிநேர கால அளவில் பொதுக்கூட்டங்களை நடத்துதல், வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு போய் வர போக்குவரத்து வசதி செய்து கொடுத்தல் மற்றும் வாக்காளர் சின்னங்களை குறிக்கும் விதமாக எத்தகைய பொருட்கள் மற்றும் காகிதத்துண்டுசீட்டுகள் வழங்குதல் கூடாது.

ஓர் அரசியல் கட்சி வேட்பாளரின் கடந்தகால சாதனைகள் மட்டுமே விமர்சனம் செய்ய வேண்டும். அவரது பொதுநல நடவடிக்கைகளுக்கு தொடர்பற்ற சொந்த வாழ்க்கை குறித்த நிகழ்வுகள் பற்றியும் குறை கூறுவதை தவிர்த்தல் வேண்டும்.

ஒரு தனிநபரின் அரசியல் கருத்துகளுக்காகவும், நடவடிக்கைகளுக்காகவும் அவர்களுடைய வீடுகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் அல்லது மறியல்களை நடத்தக்கூடாது. விளம்பர தட்டிகள் அரசியல் கட்சி வேட்பாளர் அவர்களுடைய தொண்டர்கள் எந்தவொரு தனிநபருடைய இடத்தில் அவருடைய அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் நடுதல், விளம்பர தட்டிகள் தொங்கவிடுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல், கோஷங்கள் எழுப்புதல் கூடாது.

போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் போலீஸ் துறையினர் நடவடிக்கை எடுக்க ஏதுவாக அரசியல் கட்சி அல்லது வேட்பாளர் தாம் நடத்த உள்ள கூட்டத்தின் இடம், காலம் ஆகியவை குறித்து உரிய காலத்திற்கு முன்னதாகவே அனுமதி பெறவேண்டும். கூட்டத்தில் ஒலிபெருக்கிகள் வைக்க அனுமதிபெற வேண்டும். மேலும் ஒலிபெருக்கிகள் எந்த காரணத்தை கொண்டும் இரவு 10 மணிமுதல் அதிகாலை 6 மணிவரை உபயோகிக்ககூடாது.

கட்சி கொடி அரசியல் கட்சியினரை அல்லது அவர்களுடைய தலைவர்களை குறிக்கிற கொடும்பாவிகளை எரித்தல் போன்றவற்றிலும், இதுபோன்ற பிறநடவடிக்கைகளிலும் ஈடுபடுதல் குறித்து எந்தவொரு அரசியல் கட்சியும், வேட்பாளரும் செய்யக்கூடாது. தனிநபர் ஒருவர் ரூ.50 ஆயிரம் வரை எவ்வித ஆவணங்களும் இன்றி பணத்தை கொண்டு செல்லலாம். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லும் பட்சத்தில் உரிய ஆவணங்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

ரூ.10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மதிப்புடைய பொருட்கள், மது பானங்கள், பரிசு பொருட்கள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும். தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டு உள்ளதால் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரங்களின் போது பிளாஸ்டிக் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

அனைத்து வாகனங்களிலும் ஏதாவது கட்சியின் பெயர் சின்னம் மற்றும் கொடி ஆகியவை இருப்பின் அவை அகற்றப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அனுமதி பெற்ற வாகனங்களில் மட்டும் ஏதேனும் ஒருகொடி, பேனர். பதாகை வைத்து கொள்ள அனுமதி உண்டு.

இதேபோல் வாக்குப்பதிவு நாளன்று அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் அமைதியாகவும், ஒழுங்காகவும் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். வேட்பாளர்கள் ஒப்புதல் பெற்ற முதன்மை முகவர் மற்றும் வாக்குப்பதிவு முகவர் ஆகியோர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர் மற்றும் முதன்மை முகவர் ஆகியோருக்கு பயன்படுத்தும் வாகனத்திற்கு உரிய அனுமதிபெற்று பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மேலும் அனுமதி அளிக்கும் பொருட்டு விதிக்கப்படுகின்ற கட்டுப்பாடுகளை பின்பற்றுவதிலும் அவற்றிக்கு அனுமதி சீட்டுகளை பெறுவதிலும் அலுவலர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். அனுமதி பெறப்பட்ட வாகனங்களில் அனுமதி அளிக்கப்பட்ட விவரத்தை தெளிவாக தெரியும்படி ஒட்டிவைக்க வேண்டும். வாக்காளர்கள் நீங்கலாக உரிய அடையாள அட்டை இல்லாமல் எவரும் வாக்குச்சாவடிகளில் நுழைய கூடாது. அமைச்சர்கள் அலுவல் முறை பயணம் செய்கையில் தேர்தல் பணியில் ஈடுபடக்கூடாது.

மேலும் தேர்தல் பணிக்காக அரசு அதிகாரிகள், பணியாளர்களை பயன்படுத்தி கொள்ளக்கூடாது. மைதானங்கள் மற்றும் பொது இடங்களை தேர்தல் கூட்டம் நடத்துவதற்கு தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் ஒரேமாதிரியான வரையறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில் அந்த இடங்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கபடவேண்டும். மத்திய மந்திரிகள் அல்லது மாநில அமைச்சர்கள் வாக்குச்சாவடிக்குள் அல்லது வாக்குச்சீட்டு எண்ணும் இடத்திற்குள் நுழையக்கூடாது.

வேட்பாளர் அல்லது அவரது அனுமதிபெற்ற தேர்தல் முகவர் என்கிற முறையில் குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்குள் சென்றிடலாம். தனியார் கட்டிடங்கள் மற்றும் சுவர்களில் அனுமதி பெறாமல் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது. விளம்பரம் எழுதுதல் கூடாது. அவ்வாறு அனுமதியின்றி விளம்பரங்கள் எழுதுதல் குறித்து கட்டிட உரிமையாளர்கள் போலீஸ் துறையினரிடம் புகார் அளிக்கலாம்.

பொது இடங்களில் அரசியல் கட்சியினர் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு கோர்ட்டு தடைவிதித்திருப்பதால் பொது இடங்களில் மேற்படி வகையில் விளம்பரம் செய்ய வழிவகையில்லை என்பதையும் அரசியல் கட்சியினருக்கு தெரிவிக்கப்படுகிறது. அரசு வளாகம் மற்றும் கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள், அரசு நலத்திட்டங்கள் தொடர்பான அரசியல் கட்சியினரின் புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பு பலகைகள் ஆகியவற்றை அந்தந்த அரசு அலுவலக நிர்வாகத்தின் மூலமாக உடனடியாக அகற்றப்படவேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top