அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் செம்படையின் எழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாட்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் இருந்து பல நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆயிரக்க ணக்கான விவசாயத் தொழிலாளர்கள், செம்படைத் தொண்டர்களின் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை பால்பண்ணை ரவுண்டானாவில் தொடங்கிய பேரணியை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதில், சீருடை மகளிர் மற்றும் சீருடை ஆடவர்களின் கொடி அணிவகுப்பு, செண்டை மேளம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆட்டக்கலைகள், வான வேடிக்கைகள், விண்ணதிரும் கொள்கை முழக்கங்களுடன் பேரணி திலகர்திடல், பழநியப்பா கார்னர், மேல ராஜவீதி, தெற்கு நான்காம் வீதி, அண்ணாசிலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.
பேரணியில் அகில இந்திய, மாநிலத் தலைவர்களைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக பல்லாயிரக்கணக்கானோர் அணிவகுத்து வந்தனர்.
பொதுக்கூட்டம் நடைபெறும் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் பேரணி நிறைவடைந்தது. பொதுக்கூட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர் தலைமை வகித்தார். அகில இந்தியத் தலைவர் ஏ.விஜயராகவன், சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் பி.வெங்கட், மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநில செயலாளர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், விதொச மாநில செயலாளர் அ.பழநிசாமி, துணைத் தலைவர் பி.வசந்தாமணி உள்ளிட்டோர் பேசினர்.
முன்னதாக முன்னதாக மாநில பொருளாளர் எஸ்.சங்கர் வரவேற்க, வரவேற்புக்குழு பொருளாளர் கி.ஜெயபாலன் நன்றி கூறினார். பொதுக்கூட்டத்தில் ஆலங்குடி விடியல் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.