Close
செப்டம்பர் 19, 2024 11:21 மணி

புதுக்கோட்டை அரசு முன் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் நாள் விழா

புதுக்கோட்டை

புதுகை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேசிய அறிவியல் நாள் விழா

புதுக்கோட்டை அரசு முன் மாதிரி மேல்நிலைப்பள்ளியில்  தமிழ்நாடு அறிவியல் இயக்கம், வாசகர் பேரவை இணைந்து நடத்திய தேசிய அறிவியல் நாள் விழா(2023)  செவ்வாய்க்கிழமை  (28.2.2023)  நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பி.சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். மேனாள் மன்னர் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவரும்,வாசகர் பேரவை செயலருமான சா.விஸ்வநாதன்  அறிமுகவுரையாற்றி பேசியதாவது:

சென்ற 1928 -ஆம் ஆண்டு பிப்ரவரி 28 -ஆம் தேதி சர்.சி.வி. ராமனும் அவருடைய மாணவர் கே.எஸ்.கிருஷ்ணனும், பின்னாளில் “இராமன் விளைவு” என்று அறியப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்பு நிகழ்த்திய நாளை நாம் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடுகிறோம்.

இந்தியாவிற்கு முதல் நோபல் பரிசை பெற்றுத்தந்த பெருமை தமிழகத்தைச் சாரும். அறிவியல் எல்லோருடைய வாழ்க்கை யிலும் இரண்டரக் கலந்திருக்கிறது. அறிவியல் கண்டுபிடிப்பு களை அறிவதோடு மட்டுமல்ல, புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளை நிகழ்த்துகின்ற ஆற்றலையும் ஒவ்வொரு மாணவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர்எஸ்.டி.பாலகிருஷ்ணன் பேசியதாவது: சர்.சி.வி. ராமன் எதையும் விரைவாக கற்றுக்கொள்ளும் ஆற்றல் கொண்டவர். இந்தியாவில் அன்னியர் ஆதிக்கத்தில், எந்த வசதியும் வாய்ப்பும் இல்லாத காலத்தில் கிடைத்ததைக் கொண்டு ஆய்வு நடத்தி நோபல் பரிசு பெற்று சாதனை படைத்தவர் சர்.சி.வி.ராமன்.

நோபல் பரிசை வாங்கியபின் அவர் சொன்னார், “ஒரு சுதந்திர மனிதனாக இருந்து இந்த பரிசை வாங்கியிருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைத்திருப்பேன்”என்று. அவருக்குப் பின் இன்று வரை இந்திய மண்னில் ஆய்வு நடத்தி நோபல் பரிசை யாரும் பெறவில்லை. இன்று நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதைப் பயன்படுத்தி உங்களை நல்ல அறிவியல் ஆய்வாளர்களாக உயர்த்திக் கொள்ளுங்கள் என்றார் அவர்.

  தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர் ம.வீரமுத்து இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையில்,  அறிவியல் அறிவின் அவசியத்தை வலியுறுத்தினார்.

விழாவில் மாணவ மாணவிகளுக்கு வாசகர் பேரவை சார்பில் “இந்து தமிழ் திசை” தேசிய அறிவியல் நாள்  சிறப்பு இணைப்பு “களஞ்சியம்” மற்றும் அப்துல்கலாமின் எழுச்சியுரைகள் நூல்களும் வழங்கப்பட்டது.

இறுதியாக மாணவ மாணவிகள் அப்துல்கலாமின் மாணவர்களுக்கான 10 உறுதிமொழிகளையும், அறிவியல் தின உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக துணை முதல்வர் ஜி.செந்தில் வரவேற்றார். வானவில் மன்ற கருத்தாளர் நூ. ஜரினா பேகம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.  துணை முதல்வர் (இடைநிலை) இன்பராஜ் நன்றி கூறினார்.
:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top