Close
செப்டம்பர் 20, 2024 3:48 காலை

பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி முதலமைச்சரிடம் ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மனு

சென்னை

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் கோரிக்கை மனு அளித்தனர். உடன் சங்க நிர்வாகிகள்

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் அவர்களிடம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் கோரிக்கை மனு அளித்தார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு. தியாகராஜன்  சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து  அவருக்கு 70 வது பிறந்த நாளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தார். முதல்வர் பிறந்தநாளில் ஆசிரியர் களுக்கு அறிவித்த 255 கோடியில் கை கணினி, வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா முழு உடல் பரிசோதனைகள் உள்ளிட்ட அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் . மேலும் ஆசிரிய, அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மனுவினை அளித்தனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது: தமிழகத்தின் அரசு பள்ளிகளையும் ,அரசு பள்ளி மாணவர்களையும் முன்னேற்ற வேறு எந்த மாநிலத்திலும் நடை முறைப்படுத்தாத சிறப்பான பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டு வரும் முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் தமிழகத்தின் எட்டு கோடி மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் மக்களின் குறைதீர்க்கும் மனுநீதிச் சோழனாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் தனது  உடல்நிலையை பெரிதும் பேணி பாதுகாக்க அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .

எங்களின் நியாயமான போராட்டங்களையும், கோரிக்கைகளையும் உணர்ந்து அது அத்தனையும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்து எங்கள் போராட்டத்திலும், எங்கள் கடினமான சூழ்நிலையிலும் எங்களின் ஒருவராக பங்கேற்று நம்பிக்கையை ஊட்டிய தமிழ்நாடு முதல்வர் அவர்களை கீழ்க்கண்ட எங்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து விரைவாக உடனடியாகவும் நிறைவேற்றித் தர அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வையே சூனியமாக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு உடனடியாக அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியின் போது புதிய கல்விக் கொள்கையை பின்பற்றி பள்ளிக்கல்வித்துறையில் வலுக்கட்டாயமாக புகுத்திய ஆணையர் பணியிடத்தை உடனடியாக ரத்து செய்து மீண்டும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.ஈட்டிய விடுப்பு சரண் செய்து பணமாக பெறும் பழைய நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு 2004 முதல் 2006 இடைப்பட்ட கால தொகுப்பூதிய காலத்தை வரையறை செய்து அதற்கான பணப்பலனையும், பணிப்பலனையும் அளிக்க வேண்டும்.

நடுநிலைப்பள்ளிகளில் நேரடி நியமனத்தில் நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்தில் 50 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கி அப் பணியிடத்திற்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு காலம் முறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 171 தொழில் கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும். ஊக்க ஊதிய உயர்வை பழைய நடைமுறைகளை பின்பற்றி வழங்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கும், மருத்துவர்களுக்கு இருப்பதைப் போல பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக ஏற்ற வேண்டும்.ஆசிரியர்களின் பல்வேறு நிர்வாகம் சார்ந்த சிக்கல்களை தீர்ப்பதற்காக உடனடியாக பள்ளிக்கல்வித்துறை க்கென பிரத்தியோகமான நிர்வாக தீர்ப்பாயம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

இந்நிகழ்வில் மாநில செயலாளர் தி. அருள்குமார் ,மாநில பொருளாளர் பா . உதயகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ. மணிகண்டன், மாநில துணைத்தலைவர்கள் வி. மாதேஸ்வரன், கு.அத்தியப்பன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top