Close
செப்டம்பர் 20, 2024 3:42 காலை

புதுக்கோட்டை அருகே தனியார் குவாரியை மூடிவிட முடிவு

புதுக்கோட்டை

போராட்டம் தள்ளி வைப்பு

புதுக்கோட்டை அருகே உள்ள   தனியார் குவாரியை மூடுவதற்கு அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபயணம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைக் கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, வத்தனாகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட வெவ்வயல்ப்பட்டி மற்றும் வத்தனா குறிச்சி ஆதிதிராவிடர் கூட்டு குடியிருப்பு. இதன் அருகில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக எம்.எம். கிரஷர் என்ற பெயரில் கிரஷர் மற்றும் தார் பிளான்டுடன் கூடிய கல் குவாரி இயங்கி வருகிறது.

இந்நிலையில் இக்குவாரி அரசு விதிகளை மீறி செயல்படுவதா கவும், அதில் வைக்கப்படும் வெடியால் அதிர்வு ஏற்பட்டு குடியிருப்புகளில் விரிசல் ஏற்படுகிறது. குவாரியின் அதிர்வால் குழந்தைகள் மன அளவில் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது. வெளிவரும் தூசி மற்றும் புகையினால் காற்று மாசு ஏற்படுவதோடு பொது மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுகிறது. தண்ணீர் மாசுபடுகிறது என அடுக்கடுக்காக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால், வத்தனாக்குறிச்சி, வெவ்வயல்ப்பட்டி வத்தனாக் குளிச்சி காலனி, சத்திரப்பட்டி, தண்ணீர்பந்தல்ப்பட்டி, கதிரேசன்நகர், புதுவயில், திருமலைராயபுரம், உடையாம்பட்டி, சூசையப்பர்பட்டினம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கடுமையாக சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

இந்தக்குவாரியை மூடக் கோரி கடந்த மூன்று ஆண்டுகளாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும் வருவாய் துறையின ருக்கும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த கிரஷரை மூடக்கோரி கடந்த ஒரு ஆண்டுகளாக மறியல் போராட்டமும் அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கிரஷர் முற்றுகை போராட்டமும் நடைபெற்றது.

இருப்பினும் அந்த கிரஷர் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதால் ஆத்திரமடைந்த  அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து இன்று வெவ்வயல் பட்டியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபயணமாக சென்று ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டது.

கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர் தலைமையில் கந்தர்வகோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், ஒன்றியக் கவுன்சிலர் சூசைமேரி, ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகா மாயழகு, மாவட்டக்குழு உறுப்பினர் கே.தங்கவேல், ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன் உள்ளிட்ட நூற்றுக்கணக் கானோர் சனிக்கிழமைய வெவ்வயல் பட்டியில் குவிந்தனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட இருந்த கட்சித் தலைவர்களுடன் வட்டாட்சியர் சக்திவேல் மற்றும் கனிமவளத் துறை அதிகாரிகள், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எம்எம் கிரஷர் பட்டா இடத்தில் மட்டுமல்லாமல் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்திலும் கடந்த 15 ஆண்டு காலமாக கற்களை வெட்டி எடுத்து கனிமக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பை அந்நிறுவனம் ஏற்படுத்தி வருகிறது. மக்களுக்கும் கால்நடைகளுக்கும் விவசாயத்திற்கும் ஆபத்தாக செயல்பட்டு வரும் குவாரியை மூட பலமுறை போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனால் சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் எம்.எம்.கிரஷரை நிரந்தரமாக மூட தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தை தொடருவோம் என அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அதிகாரிகள், குவாரி மீதான புகார் குறித்து இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை அடிப்படையில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை கல்குவாரி இயங்காது. அதையும் மீறி கல்குவாரியில் பணிகள் மேற்கொண்டால் சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பொதுமக்கள் நலன் கருதி கிரஷர் இயங்குவது நிறுத்தி வைக்கப்படும். வருகின்ற 20ம் தேதி அன்று இரு தரப்பின ரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற இருந்த நடைபயணம் மற்றும் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top