Close
செப்டம்பர் 20, 2024 5:31 காலை

வேங்கைவயல் குடிநீர்தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம்… மரபணு சோதனைக்கு வராமல் 8 பேர் தவிர்த்ததால் பரபரப்பு…

புதுக்கோட்டை

வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக டிஎன்ஏ பரிசோதனைக்காக நேற்று 3 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. மேலும் 8 பேர் பரிசோதனைக்கு வரவில்லை. இந்த  விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனையில் 8 பேர் பங்கேற்க வராதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது குறித்து சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர். மொத்தம் 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனையும், அதில் 2 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் செய்ய போலீஸார் முடிவெடுத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஆதி திராவிடர்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டியில் சேகரிக்கப்படும் குடிநீரையே இந்த மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் பலருக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் பயன்படுத்தி வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி குடிநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது, அந்தக் குடிநீரில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சிலர் வேண்டுமென்றே இந்தச் செயலில் ஈடுபட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. ஜாதி வெறுப்பு காரணமாக இந்த செயலில் அவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி வழக்கு பதிவு செய்தது.

இதற்கிடையே, டிஎன்ஏ சோதனையை நடத்தி அந்தக் கழிவு யாருடையது என்பதை கண்டறிய சிபிசிஐடி முடிவு செய்தது. இதற்கு புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

அதன் அடிப்படையில் ஆயுதப்படை காவலர் உட்பட 2 பேருக்கு கடந்த வாரம் சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் சோதனை நடத்தப்பட்டது. பின்னர், டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கு ரத்த மாதிரி சேகரிப்பதற்காக 11 பேரும் நேற்று ஆஜராகுமாறு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

வராத 8 பேர்: 
அப்போது  சம்மன் அனுப்பப்பட்ட பயிற்சி காவலர் முரளி ராஜா உள்ளிட்ட 3 பேர் மட்டுமே ரத்த மாதிரிகளை கொடுத்துச் சென்றனர். மீதமுள்ள 8 பேர் இந்த சோதனைக்கு வரவில்லை. அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படவுள்ளதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தனர். ஒருவேளை, அப்போதும் அவர்கள் வரவில்லை என்றால் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதில், ஏற்கெனவே குரல் மாதிரி பரிசோதனைக்கு ஆஜராகிய காவலர் மற்றும் 2 பேர் என மொத்தம் 3 பேர் நேற்று புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயியல் பிரிவு ஆய்வகத்தில் ஆஜராகினர். அவர்களிடமிருந்து ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. அப்போது, சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி உடனிருந்தார்.

 ரத்த மாதிரி கொடுக்க வராமல் புறக்கணித்த 8 பேரும் . டிஎன்ஏ பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில்மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top