Close
செப்டம்பர் 20, 2024 4:09 காலை

மணல் கடத்தல் புகார் : அலுவலகத்தில் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் கொலை.. குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி; மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்லூர்து பிரான்சிஸ்

பட்டப்பகலில் அலுவல கத்துக்குள் புகுந்து கிராம நிர்வாக அதிகாரி அரிவாளால் வெட்டிக்கொல்லப்பட்டார். அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் ( 55). இவர் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக (விஏஓ) பணியாற்றி வந்தார்.

இவர் தினமும் சூசைபாண்டியாபுரத்தில் இருந்து மோட்டார் பைக்கில் அலுவலகத்துக்கு சென்று வந்தார். நேற்றும் அவர் வழக்கம் போல் அலுவலகத்துக்கு வந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.

மதியம் 12 மணியளவில் அவர் பணியில் இருந்தபோது 2 மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிசை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். உடனே அவர் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் அவரை சுற்றி வளைத்து வெட்டினர்.

பின்னர் அங்கிருந்து வெளியே ஓடி வந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். கண் இமைக்கும் நேரத்தில் இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, லூர்து பிரான்சிசை மீட்டு திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அவர்  உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சத்யராஜ், முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ஜமால், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விஏஓ உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர், கலெக்டர் செந்தில் ராஜ் கூறியபோது, ‘‘விஏஓ லூர்து பிரான்சிஸ் நேர்மையானவர், துணிச்சல் மிக்கவர். இதற்கு முன்பு, ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை துணிச்ச லாக அகற்றினார்.

அப்போதும் சிலர் அவர் மீது தாக்குதல் நடத்த முயன்றனர். அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது மணல் திருட்டு தொடர்பாக காவல்துறையில் அவர் புகார் அளித்ததால், இந்த கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. நேர்மையாக செயல்பட்ட அரசு அலுவலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்றார்.

மணல் கடத்தல் விவகாரத்தில்…

அதாவது, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முறப்பநாடு தாமிரபரணி ஆற்று பகுதியில் லூர்து பிரான்சிஸ் ரோந்து சென்றபோது சிலர் மணலை அள்ளி இருசக்கர வாகனத்தில் ஏற்றியதை கண்டித்ததுடன் அவர்கள் மீது முறப்பநாடு போலீசில் புகார் அளித்து இருக்கிறார். இந்த முன்விரோதத் தில் அவரை மர்மநபர்கள் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

குற்றவாளியை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு

இதையடுத்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமசுப்பிரமணியனை கைது செய்தனர். மேலும் தலைமறை வாக உள்ள மாரிமுத்து என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாலாஜி தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக உள்ள மாரிமுத்து என்பவரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறை வாக இருந்த மாரிமுத்துவை நெல்லை மாவட்டம் தாழையுத்து அருகே தனிப்படை போலீசார்  கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிசுக்கு போன்ஸ் லிட்டாள் (48) என்ற மனைவியும், அஜேய் ஆல்வின் (26), மார்ஷல் ஏசுவடியான் (23) ஆகிய 2 மகன்களும், அருள் லிசி ரபேல் (24) என்ற மகளும் உள்ளனர். இதில் அஜேய் ஆல்வின் சிவகங்கையில் ரெயில்வே ஊழியராக உள்ளார். மார்ஷல் ஏசுவடியான் மாஜிஸ்திரேட்டு பணி தேர்வுக்கு தயாராகி வருகிறார். அருள் லிசி ரபேல் ஆசிரியர் பயிற்சி முடித்து உள்ளார்.

கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் உடல் பிரேத பரிசாதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலை பார்த்து மனைவி போன்ஸ் லிட்டாள், மகன் மார்ஷல் ஏசுவடியான் கதறி அழுது கொண்டே இருந்தது பரிதாபமாக இருந்தது.

அவர்களை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சாத்தூர் ராமச்சந்திரன், கனிமொழி எம்.பி. மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கே.செந்தில்ராஜ் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

தூத்துக்குடி
உயிரிழந்ததை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மரு.கி.செந்தில்ராஜ் மாவட்டசூப்பிரண்ட் லோக.பாலாஜி சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு அன்னாரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

ரூ.1 கோடி- அரசு வேலை

கிராம நிர்வாக அதிகாரி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரியும் லூர்து பிரான்சிஸ் பணியில் இருக்கும்போது வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நமக்கெல்லாம் மிகுந்த துயரத்தை அளித்துள்ளது. தனது கடமையை முறையாக நிறைவேற்றி, அதன் காரணமாக உயிரிழந்த கிராம நிர்வாக அதிகாரியின் பொறுப்புணர்வையும், கடமை உணர்ச்சியையும் தமிழ்நாடு அரசு போற்றுகின்றது. உயிரிழந்த லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு அரசு சார்பாக உடனடியாக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 கோடி நிதியுதவியும் அவரது, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எடப்பாடி கண்டனம்..கிராம நிர்வாக அதிகாரி படுகொலை செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தி உள்ளார்.

ஒரு அரசு அதிகாரிக்கே இத்தகைய நிலையென்றால் பாமர மக்களுக்கு இந்த ஆட்சியில் எங்கே இருக்கிறது பாதுகாப்பு? நாடக அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தும் இந்த அரசின் முதலமைச்சர் இனியாவது சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திட்டவட்டமாக வலியுறுத்துகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top