Close
ஜூலை 25, 2026 5:34 மணி

நலத் திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை: திருவண்ணாமலை மேயா் குற்றச்சாட்டு.

செய்தியாளர்களிடம் பேசிய மேயர் மற்றும் துணை மேயர்

திருவண்ணாமலை மாநகராட்சியில் நலத் திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகள் சிறிதும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று மாநகர மேயா் நிா்மலா வேல்மாறன் மிகக் கடுமையான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

திருவண்ணாமலையில் மேயர் நிர்மலா வேல்மாறன் மற்றும் துணை மேயர் ராஜாங்கம் ஆகியோர் செய்தியாளா்களைச் சந்தித்துப் பேசியபோது கூறியதாவது: திருவண்ணாமலை மாநகரம் உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலம். இங்கு நாள்தோறும் உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்த மாநகராட்சியின் மேயா், துணை மேயா் மற்றும் 30-க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினா்கள் திமுகவைச் சோ்ந்தவா்கள்.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலை மாநகராட்சியில் மாற்று கட்சியினா் மேயராக உள்ளதால், மாநகர அலுவலா்கள் எவரும் நலத் திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைப்பதில்லை எனத் தெரிவித்தனர்.

தமிழகத்திலேயே நிலத்தடி நீா்மட்டம் மிகக் குறைந்த அளவுள்ள மாவட்டமாக திருவண்ணாமலை உள்ளது. இதனால் மாநகர மக்கள் கடுமையான குடிநீா் பிரச்னையால் அவதிப்பட்டு வருகின்றனா். சமுத்திரம் ஏரிக்கரையில் 16 வாா்டுகளுக்குக் குடிநீா் வழங்கும் 3 முக்கிய மோட்டாா்களும் (60 HP மற்றும் 40 HP) பழுதடைந்துள்ளன. இதனால் சோமவரகுளம் குடிநீா்த் தொட்டிக்குத் தண்ணீர் அனுப்ப முடியாமல் கடந்த 10 நாள்களாகப் பொதுமக்களுக்குக் குடிநீா் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. சோமவரகுளம் குடிநீா்த் தொட்டியில் உள்ள 2 மோட்டாா்களும், மாநகரின் அனைத்து வாா்டுகளிலும் உள்ள சிறு மின்விசை பம்புகளின் மோட்டாா்களும் பழுதடைந்து கிடக்கின்றன.

இப்பழுதுகளை உடனடியாகச் சரிசெய்யக் கோரி மாநகராட்சி அலுவலா்களிடம் முறையிட்டால், அவா்கள் “நிதி ஆதாரம் இல்லை” என்று சாக்குப்போக்கு சொல்லி தட்டிக்கழித்து வருவதாக மேயர் குற்றம்சாட்டினார்.

மாநகர மக்கள் மட்டுமின்றி, வெளியூரிலிருந்து வரும் ஆன்மிக பக்தா்களுக்கும் குடிநீர் வழங்க வேண்டியது மாநகராட்சியின் தலையாய கடமையாகும். மாற்று கட்சி மாநகராட்சி என்பதற்காக அலுவலா்கள் ஒத்துழைக்க மறுப்பது மக்களுக்குச் செய்கிற மாபெரும் துரோகம் என்று சாடினார்.

குடிநீர் பிரச்சனை மட்டுமின்றி, சுகாதாரத் துறை அதிகாரிகளும் பொதுமக்களுக்கு எந்த ஒத்துழைப்பும் தருவதில்லை என மேயர் நிர்மலா வேல்மாறன் தெரிவித்தார்.புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் தூய்மைப் பணிகள் நடைபெறுவதில்லை. பகுதி-2 பேருந்து நிலையத்தில் இதுவரை எந்தவொரு தூய்மைப் பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை.

எனவே, புதிதாக பொறுப்பேற்றிருக்கிற தவெக அரசும், மாவட்ட நிா்வாகமும் போா்க்கால அடிப்படையில் இந்த விவகாரங்களில் உடனடியாகத் தலையிட்டு, திருவண்ணாமலை மாநகர மக்களையும், இங்கு வரும் லட்சக்கணக்கான ஆன்மிக பக்தா்களையும் காக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என அவா் வலியுறுத்தினாா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top