நாமக்கல்லில் இருந்து பெரம்பலூர் வழியாக அரியலூருக்கு புதிய ரயில்பாதை அமைக்கப்படும் என பார்லியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கு நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் கொமதேக எம்.பி., மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல்லில் இருந்து அரியலூருக்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என நான் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்து பேசியிருந்தேன். திருச்சி எம்.பி., அருண் நேருவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் இதை ஏற்று, நாமக்கல்லில் இருந்து பெரம்பலூர் வழியாக அரியலூருக்கு புதிய ரயில்வே பாதை அமைக்கும் பணிக்கு, முதற்கட்டமாக விரிவான செயல்திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், செயல்திட்ட அறிக்கை தயாரானபிறகு, மாநில அரசுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, நிதி ஆயோக் மற்றும் மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்பட்டு திட்டத்திற்கு முறையான அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ரயில்வே பணிகளுக்காக கடந்த 2009-2014 நிதியாண்டுகளில், ஆண்டு ஒன்றுக்கு ரூ. 879 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த நிதி ஆண்டில் 8 மடங்கு நிதி அதிகரிக்கப்பட்டு ரூ. 7,611 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் ஏப். 1ம் தேதி 8 புதிய ரயில் வழித்தடங்கள், 3 அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டங்கள், 8 இரட்டை ரயில் பாதைகள் என மொத்தம் 1,874 கி.மீ. தூரத்திற்கு ரூ. 27,282 கோடி மதிப்பில் 19 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் மணலூரில் ரூ. 474.3 ஏக்கர் பரப்பில் ரூ. 587.47 கோடி மதிப்பிலும், பிள்ளைப்பாக்கத்தில் 379.73 ஏக்கள் பரப்பில் ரூ. 424.55 கோடி மதிப்பிலும் 2 புதிய எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி மையங்கள் அமைக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்திற்கு புதிய ரயில்வே திட்டங்கள் அறிவித்துள்ள மத்திய அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக எம்.பி. மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.




