Close
செப்டம்பர் 20, 2024 4:08 காலை

செங்கோல் விவகாரத்தில் புனையப்படும் கதைகளை நம்ப வேண்டாம்: ப.சிதம்பரம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் பேட்டியளித்த முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம். உடன் முன்னாள் எம்எல்ஏ ராமசுப்புராம்

செங்கோல் விவகாரத்தில் புனையப்படும் கதைகளை நம்ப வேண்டாம் என  முன்னாள் மத்திய  அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.

புதுக்கோட்டைக்கு  நேற்று வந்த அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:

எம்.பி.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் ரூ.5 கோடி நிதியை குறைக்காமல் இருந்தாலே பெரிய விஷயம்.

செங்கோல் விவகாரத்தில் நிறைய புனைக்கதைகள் வருகிறது.புனைக்கதைகளை நம்ப வேண்டாம். தமிழக கவர்னர் புனைகதைக்கு மேலும் ஜோடித்து ஒரு கதை சொல்கிறார். உண்மையில் நடந்தது என்ன என்பதை நேரு, ராஜாஜியின் வரலாற்றில் வரலாற்று ஆசிரியா்கள் எழுதியிருக்கின்றனர்.

வரலாற்று ஆசிரியர்கள் சொன்னதில், திருவாவடுதுறை ஆதீனம் இங்கிருந்து ரெயிலில் பயணம் செய்து 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ஆம் தேதி மாலையில் ஜவஹர்லால் நேருவின் வீட்டுக்கு சென்றுள்ளார். நேருவும் வந்து பார்த்துள்ளார். வந்த இடத்தில் இந்த செங்கோலை கொடுத்து உங்களுக்கு நினைவு பரிசாக தருகிறேன் என்று கூறியிருக்கிறார். அதனை நேருவும் வாங்கியிருக்கிறார்.

அந்த நேரத்தில் நேருவுக்கு பல நூறு நினைவு பொருட்கள் வந்தன. அந்த நினைவு பொருட்கள் அனைத்தையும் வரிசைப்படுத்தி பத்திரமாக அலகாபாத் அருங்காட்சி யகத்தில் வைத்தார். ஆகஸ்டு 14-ஆம்  தேதி மவுண்ட்பேட்டன் பிரபு தில்லியிலேயே இல்லை. அவர் பாகிஸ்தான் சென்றிருந்தார்.

அன்று பாகிஸ்தான் நாட்டின் சுதந்திரதின நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவு 7 மணிக்கு தில்லி வந்தார். அதன்பின் வீட்டிற்கு சென்று விட்டு இந்திய சுதந்திர தின நிகழ்ச்சிக்கு இரவு 11 மணிக்கு மேல் வருகிறார். 12 மணிக்கு சுதந்திரம் கிடைக்கிறது. அதன்பின் நேரு உரையாற்றினார். நடந்தது அவ்வளவு தான்.

அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு பேழையில் `நேருவுக்கு அளிக்கப்பட்ட தங்க கோல்’ என எழுதப்பட்டிருந்தது. அதில் ஒன்றும் `வாக்கிங் ஸ்டிக்’ என எழுதப்படவில்லை. வரலாற்று ஆசிரியர்கள் எழுதினால் அது வரலாறு. மற்றவர்கள் எழுதுவது எல்லாம் புனைக் கதைகள்.அந்த செங்கோல் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தான்.

மணிப்பூர் கலவரங்களை நிறுத்துவதற்கு  இவ்வளவு நாள் கழித்து அமித் ஷா சென்றிருப்பது மகிழ்ச்சி.  மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் மவுனம் காப்பது வருத்தமளிக்கிறது. தில்லியில் 30 நாள்களாக போராடி வந்த  மல்யுத்த வீரர்களை கைது செய்தது கண்டனத்துக்குரியது.

இந்திய அரசியல் சாசனப்பிரிவு  79 -ல்  நாடாளுமன்றம் என்பது  குடியரசுத்தலைவரும் மற்றும் இரண்டு அவைகளும் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது பாராளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவுக்கு குடியரசுத்தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பாதது ஏன்?.  எனவே, இது தவறான முன்னுதாரணம் எனக்கூறி  காங்கிரஸ் உள்பட 20 கட்சிகள் ஒன்றிணைந்து விழாவை புறக்கணித்தோம்.

தமிழகத்தில் கள்ளச்சாராய உயிரிழப்பால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என சொல்ல முடியாது. இன்னும் முழுமையாக ஒடுக்க வேண்டும். வருமான வரித்துறை சோதனைகள் பெரும்பகுதி ஜோடிக்கப்பட்ட வையாகத்தான் இருந்திருக்கின்றன. சில சோதனைகள் உண்மையாக இருக்கலாம். அது சோதனை முடிந்த பின் தெரியவரும். மணல் கடத்தலை தடுக்கும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது என்றார் ப, சிதம்பரம்.
இதில், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராம. சுப்புராம்,  நிர்வாகிகள்  இப்ராஹிம்பாபு, நகர் மன்ற உறுப்பினர் ஜெ. ராஜாமுகமது, வட்டாரத் தலைவர்கள் பன்னீர்தசெல்வம், அய்யப்பன், தன்ராஜ், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத்தலைவர் சரண்ராஜ், அரிமளம் இப்ராஹிம், மற்றும் வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள் திரளானோர்  கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top