Close
செப்டம்பர் 20, 2024 10:43 காலை

தமிழ்நாட்டை அபகரிக்கும் முயற்சியை தடுக்கும் வலிமை திமுகவுக்கு மட்டுமே இருக்கிறது: அமைச்சர் உதயநிதி

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு விழாவில் அமைச்சர் உதயநிதிக்கு நினைவுப்பரிசளித்த அமைச்சர் ரகுபதி, கே.கே. செல்லப்பாண்டியன் உள்ளிட்டோர்

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்து ஜல்லிக்கட்டு அமைப்புகளின் சார்பில்  ஜல்லிக்கட்டுப் பேரவையின் தலைவர் பி. ராஜசேகரன் தலைமையில்     நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில்ஸ  விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்று, ஜல்லிக்கட்டுப் பேரவையினர் அளித்த காளை சிலை, முதல்வர் ஸ்டாலின் படம், வெள்ளி செங்கோல் ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டு  பேசியதாவது:

மதுரையில் நடைபெறுவதாக இருந்த இந்த நன்றி அறிவிப்புக் கூட்டம், தமிழ்நாட்டில்  அதிக  எண்ணிக்கையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் புதுக்கோட்டையில் நடைபெற வேண்டும் என அமைச்சர்கள் ரகுபதியும் மெய்யநாதனும் விரும்பினார்கள். வெறுமனே நன்றியறிவிப்பு விழாவாக அல்லாமல் வெற்றி விழாவாக இது நடை பெறுகிறது. ஏற்கெனவே அரசு விழாவில் பங்கேற்ற நான், தற்போது நன்றியறிவிப்பு விழாவில் பங்கேற்றுள்ளேன். அடுத்து புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்க்க வருவேன்.

தமிழ்நாட்டை  பாசிஸ்டுகள் ஆளத் துடிக்கின்றனர். அதற்காக நேரடியாக எதையும் செய்ய முடியாமல் புறவாசல் வழியாக நுழைய முயற்சிக்கிறார்கள். நாம் எப்போதும் நம் பாரம்பரியப்படி, வாடிவாசல் வழியாக நேரடியாக காளையை அடக்குவதைப் போல,  அவர்களை நேரடியாக சந்திப்போம்.

2016இல் அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது, முதலில் 5 பேருடன் தொடங்கிய ஜல்லிக்கட்டு போராட்டம், பிறகு உலகம் முழுவதும் நடைபெற்றது. அப்போது போராட்டத்தை தடுக்க முயற்சித்தார்கள். ஆட்டோக்களைக் கொளுத்தினார்கள்.

எந்தப் போராட்டத்தையும் அதிமுக அரசு நேரடியாக சந்திக்கவில்லை. தூத்துக்குடி ஸ்டெர்லைட்டு எதிரான போராட்டத்திலும் 13 பேரை சுட்டுக் கொன்றார்கள். ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டத்தையும் அப்படித்தான் தடுத்தார்கள்.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் பாஜக நுழைய முயற்சிக்கிறது. பாஜகவின் கிளைக்கழகமாக அதிமுக செயல்பட்டு வருகிறது. இங்கே ஒருவர்(கவர்னர்) தன்னுடைய வேலையைத் தவிர எல்லைவற்றையும் செய்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொடுக்கும் கோப்புகளில் கையெழுத்திட வேண்டியதுதான் அவரது வேலை. ரப்பர் ஸ்டாம்ப்பாக செயல்பட வேண்டியவர் அவர்.உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற சனாதனக் கொள்கையைத் தூக்கிப் பிடிக்கிறார். குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கிறார். இந்தியாவில் இந்தியும், சம்ஸ்கிருதமும் மட்டுமே இருக்க வேண்டும் என்கிறார்கள்.

21 கோப்புகளில் கையெழுத்திடாமல் வைத்திருக்கிறார். அதில் பெரும்பாலானவை முன்னாள் அமைச்சர்கள் மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்குகள் தொடர்பானவைதான். அதிமுகவும் பாஜகவும் பின்னிப் பிணைந்துள்ளதுதான் காரணம். இங்குள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும், வேலுமணியின் மீதும் சோதனை நடத்தினார் களே, என்ன நடந்தது.

தமிழ்நாட்டை அபகரிக்க முயற்சிக்கிறார்கள். திமுக இருக்கும் வரை அந்த முயற்சி ஒரு போதும் நடக்காது. பல லட்சம் தொண்டர்களால் ஆன இயக்கம் திமுக. ஒரு கிளைக் கழகச் செயலரைக் கூட தொட்டுப் பார்க்க முடியாது. அதனால்தான் அடக்குமுறையை ஏவிவிடப் பார்க்கிறார்கள். அண்ணாவின் வழியில்செயல்படும் முதல்வர் ஸ்டாலின் பாஜகவின் முயற்சிக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டே இருப்பார்.

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் 25 சதவிகிதம் நிறைவுபெற்றுள்ளன. அனைத்துத் தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் மினி ஸ்டேடி யத்துடன் ஜல்லிக்கட்டுக்கான வாடிவாசல்கலையும் அமைக்க வேண்டும் என அமைச்சர்கள் கோரியிருக்கிறார்கள். முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று அவற்றையும் அமைத்துத் தருவோம்.

கீழடியில் தொடர் அகழாய்வு நடைபெற உத்தரவிட்டதுடன், அருங்காட்சியத்தையும் அமைத்தவர் ஸ்டாலின். அண்ணா நூற்றாண்டு விழாவின்போது நினைவு நூலகம் அமைத்தார். கருணாநிதி நூற்றாண்டு விழாவின்போது உயர் சிறப்பு மருத்துவமனை தொடங்கினார். ஆனால், எம்ஜிஆர் நூற்றாண்டும் வந்தது. அதிமுகவினர் என்ன செய்தார்கள். கடற்கரைச் சாலையில் வளைவு ஒன்றை அமைத்தார்கள்.

குறுகிய காலத்தில் உலகின் பெரும் முதலாளிகளின் பட்டியலில் இரண்டாம் இடம் அதானிக்கு கிடைத்தது எப்படி எனக் கேள்வி எழுப்பினார் காங்கிரஸ் தலைவர் ராகுல். அவரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவரது பதவியைப் பறித்தார்கள். பெரியார், அண்ணா, கருணாநிதியின் வழிவந்த நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம் ஈடிக்கும் பயப்பட மாட்டோம். ரெய்டு எங்களுக்குப் புதிதல்ல.

எத்தனை மோடிக்கள், அமித்ஷாக்கள், நட்டாக்கள் வந்தாலும், தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது. பாஜகவின் தொண்டர்படையாக வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வுத் துறையினர் செயல்பட்டு வருகின்றனர். அதுவும் தேர்தல் நேரத்தில் இவர்கள் வேகமாக செயல்படுகிறார்கள்.

மத்திய பாஜக ஆட்சியமைந்த பிறகு, அமலாக்கத்துறையினர் 121 வழக்குகளைத் தொடுத்தார்கள். அவர்களில் 115 பேர் நாட்டிலுள்ள எதிர்க்கட்சியினர் மீது தொடுக்கப்பட்டவை, தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் 18 மணி நேரம் உணவு, தண்ணீர் கூடக் கொடுக்காமல் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அவசரநிலைக் காலத்திலேயே தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிலும், முரசொலி அலுவலகத்திலும் ரெய்டு நடத்தப்பட்டது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் தலைமைச் செயலகத்தில் முதல்முறையாக அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அதிமுக அமைச்சர்கள் வாயைத் திறக்கவில்லை.உயர் சிறப்பு மருத்துவமனை திறக்க குடியரசுத் தலைவரை நாம் அழைக்கிறோம். ஆனால், நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அடிமைகளை விரட்டியடித்தோம். நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் அந்த அடிமைகளின் எஜமானர்களையும் விரட்டியடிப்போம். முதல்வர் தவிர்க்க முடியாத காரணத்தால் இங்கு வர இயலாத நிலையில்,  இந்த விழாவில் பங்கேற்கச் சொல்லி அன்புக் கட்டளையிட்டார் . அவர் பங்கேற்காவிட்டாலும் அவரது மனம் முழுவதும் இந்த விழாவில் தான் இருக்கிறது என்றார் அமைச்சர் உதயநிதி.

விழாவில், அமைச்சர்கள் கே.என். நேகு, கே.ஆர்.பெரியகருப்பன், அன்பில் மகேஷ்பொய்யாமொழி, அனிதாராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, திருச்சி மேயர் மு. அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா, நகர திமுக செயலர் ஆ. செந்தில், நிர்வாகிகள் ரா.சு. கவிதைப்பித்தன், முத்துக்கருப்பன், எம்.எம். பாலு, நைனாமுதமது, லியாகத்அலி, த. சந்திரசேகரன்,  உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஜல்லிக்கட்டுப் பேரவையின் இளைஞரணிச் செயலர் திருச்சி ராஜேஷ் வரவேற்றார். முடிவில் திமுக வடக்கு மாவட்டச் செயலர் கே.கே.செல்லப்பாண்டியன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top