Close
செப்டம்பர் 20, 2024 5:48 காலை

அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசுகிறார், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் எம்எல்ஏ

புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே (21.6.2023) நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை  வகித்து  பேசியதாவது:

விடியா    திமுக ஆட்சி முடிய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆட்சியை கலைத்து விட்டு வருகிற நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலை சந்திக்க திமுக தயாரா? என்கிற கேள்விக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தைரியமாகக்கூறுகிறோம்.

ஆனால் திமுகவுக்கு அந்த துணிச்சல் இருக்கிறதா என்றால் இல்லை என்பதே உண்மை நிலைமை.   மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இரட்டை இலை சின்னம் உடையும் அளவிற்கு பொத்தானை  அழுத்தி மக்கள் வாக்களிப்பார்கள்.

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த  காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தை  முடக்கி ஆமை வேகத்தில்  திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. ஆனால்,  அதிமுக ஆட்சி நடைபெற்றிருந்தால் இன்றைக்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தண்ணீர் வந்திருக்கும்.வரக்கூடிய தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார் டாக்டர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ.

ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான், நகர செயலர்கள் சேட்டு, பாஸ்கர், பாசறை கருப்பையா உள்பட திரளான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர்  விஜயபாஸ்கர் எம்எல்ஏ- செய்தியாளர்களிடம் கூறியதாவது: செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல் தி.மு.க. அரசு முட்டுக்கொடுத்திருக்கிறது. இதனை விட்டுவிட்டு மக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.

15 மாதங்களில் பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணியை முடித்து திறந்து உள்ளோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருக்கிறார். அதற்கென சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை. 11 மாதங்களில் ரூ.350 கோடியில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை நாங்கள் திறந்தோம். தமிழகத்தில் 2-வது பல் மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்ததை 2 வருடங்களாக திறக்கவில்லை.

செந்தில்பாலாஜிக்கு  உரிய சிகிச்சை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். அரசு மருத்துவமனை களில் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிப்பதில் காப்பீடு அனுமதி கிடைக்காததால் நோயாளிகளுக்கு சிகிச்சைகளை நிறுத்தி வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றார் விஜயபாஸ்கர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top