Close
செப்டம்பர் 20, 2024 4:08 காலை

6 ஆவது புத்தகத்திருவிழா… புதுக்கோட்டையில் கோலாகலமாக தொடக்கம்

புதுக்கோட்டை

புத்தகத்திருவிழாவை பார்வையிட்ட அமைச்சர் ரகுபதி மற்றும் ஆட்சியர் உள்ளிட்டோர்

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து  மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடத்தும், 6 -ஆவது  புத்தகத் திருவிழாவை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் .எஸ்.ரகுபதி  (28.07.2023) தொடக்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர்   அமைச்சர்  ரகுபதி பேசியதாவது:

புதுக்கோட்டை
புத்தகத்திருவிழாவில் பேசிய சட்ட அமைச்சர் ரகுபதி

மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்திட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில்,   புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 6 -ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றியும், தனது நாகரீகத்தைப் பற்றியும் தெரிந்துகொள்வதற்கு வரலாறு மிக முக்கியமாகும். 3000 ஆண்டிற்கு மேற்பட்ட வரலாற்றுப் பெருமை கொண்ட நம்முடைய வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு புத்தகங்கள் மிக முக்கியமானதாகும்.

மேலும் நம்மை நாமே அறிந்து கொள்வதற்கு வாசிப்பு பழக்கத்தை நம்மிடையே வளர்த்துக்கொள்ள வேண்டும். விலைமதிப்புமிக்க செல்வமான கல்வி செல்வத்தை நம்மிடமிருந்து யாராலும் பறிக்க இயலாது. அப்படிப்பட்ட கல்வி செல்வத்தினை அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில், தமிழக அரசின் சார்பில், இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

வாசிப்பு பழக்கத்தை மாணவ, மாணவிகளிடம் ஏற்படுத்தும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் நூலகத்திற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், மதுரையில் வரலாற்று சிறப்புமிக்க ‘கலைஞர் நூற்றாண்டு நூலகத்தினை  தமிழ்நாடு முதலமைச்சர்  திறந்து வைத்துள்ளார்.

இந்த நூலகத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில், அனைத்து அடிப்படை வசதிகளுடன் உலகத்திலேயே சிறந்த நூலகமாக திகழ்ந்து வருகிறது. இதுபோன்ற திட்டங்களால் கல்வி வளர்ச்சியில் தமிழகம் சிறப்பிடம் பெற்று வருகிறது.

எனவே தமிழனின் அடையாளமாக விளங்கும் வாசிப்பு பழக்கத்தை நம்மிடையே வளர்க்கும் வகையில் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் 28.07.2023 முதல் 06.08.2023 வரை 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழாவில்  அனைவரும் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கி படித்து பயன்பெற வேண்டும்  என்றார் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் சிறைத்துறை சார்பில் கூண்டுக்குள் வானம் அரங்கில் புத்தகம் வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, காவல்துறை திருச்சி சரக துணைத் தலைவர் (சிறைத் துறை) கே.ஜெயபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி ,

முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் ள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராசு.கவிதைப்பித்தன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா,

வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் க.கருணாகரன், நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத்அலி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன்,

புதுக்கோட்டை
புத்தகத்திருவிழாவில் புத்தகங்கள் வாங்கும் சிபிஎம் கட்சி  மாவட்ட செயலர் கவிவர்மன்

புத்தகத் திருவிழாக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர் தங்கம்மூர்த்தி, கவிஞர் நா.முத்துநிலவன், அ. மணவாளன், முனைவர் ஆர்.ராஜ்குமார், எஸ்.டி. பாலகிருஷ்ணன், ம.வீரமுத்து, மு.முத்துக்குமார், த.விமலா, க.சதாசிவம், ஈ.பவனம்மாள்,கவிஞர் ஜீவி,கவிஞர் ராசி. பன்னீர்செல்வன், கவிஞர் எம். ஸ்டாலின் சரவணன்,கிருஷ்ண வரதராஜன், கவிஞர்  மு.கீதா.

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்  மு.க.ராமகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு, வட்டாட்சியர் விஜயலட்சுமி, உள்ளாட்சி அமைப்பு பிரதி நிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்;

இப்புத்தகத் திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 75 பதிப்பகங்களிலிருந்து சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட அறிவியல், அரசியல், கவிதை, வரலாற்றுக் கதைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின்கீழ் புத்தகங்கள் 112 அரங்குகளில்  விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top