Close
செப்டம்பர் 20, 2024 9:48 காலை

லண்டன் புத்தகக் கண்காட்சியில் நான்…

அயலகத்தமிழர்கள்

லண்டன் புத்தகக் கண்காட்சி

சௌத் லண்டன் நியூ மால்டனில் நேற்று (27.08.2023) நடை பெற்ற புத்தகக்கண்காட்சிக்கு நானும் நண்பர் சாந்தனும் சென்றோம். காலை 11 மணியளவில் தொடங்கி இரவு 8 மணி நீடித்தது. கண்காட்சியை ஏற்பாடு செய்த தோழர் பௌஷர் இன்முகத்துடன் வரவேற்று சிற்றூண்டி வழங்கினார்.

அரங்கம் முழுதும் புதினம், சிறுகதை, கவிதை, கட்டுரை, அரசியல், சமூகம், வரலாறு, பண்பாடு, மருத்துவம் என 500க்கும் மேற்பட்ட தலைப்புகளினான புத்தகங்கள் அழகாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. சிறுவர் இலக்கிய படைப்பு களுக்கென்று தனியொரு இடத்தை ஒதுக்கி இருந்தது கவனத்தை ஈர்த்தது.

புத்தகக் கண்காட்சியில் நூல் அறிமுகம், எழுத்தாளர் அனுபவம், இலக்கிய கலந்துரையாடல்என நிகழ்வுகள் ஆரவாரமின்றி எளிமையாக ஒருபுறம் நடந்து கொண்டி ருந்தது.

படைப்புகளின் வகைக்கேற்ப, தனி தனி மேஜைகளில் இருக்கும்படியாகவும், பார்வையாளர்கள் நின்று பார்வையிட போதுமான இடைவெளி விட்டு புத்தகங்களை காட்சிப் படுத்திய விதமும் கவனத்தை ஈர்க்கும் வகையில், கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.

கண்காட்சிக்கான ஏற்பாடு, சிற்றுண்டி, தேநீர் விருந்து, மதிய உணவு உட்பட புத்தக திருவிழா ஒருங்கிணைப்பிற்கான அர்ப்பணிப்பில் தோழர் பௌஷர் அவர்களின் மெனகெடல்
வியக்கும்படி இருந்தது.

என் அலமாரியில் இருக்கிற பல புத்தகங்களை கண்காட்சி யில் காணமுடிந்தது. நம்மிடம்இல்லாத புத்தகம், இதுவரை வாசிக்காத புத்தகம், வாசிக்க விரும்பிய புத்தகம் என வகைப்படுத்தி, சில புத்தகங்களை தேடிப்பிடித்து வாங்கி னேன். ஒவ்வொரு முறையும் ஊருக்கு செல்கிற போது வாங்க நினைத்து, இயலாமல் போன மிர்தாத்தின் புத்தகம் இந்த கண்காட்சியின் மூலம் என் கைக்கு வந்தது.

அரங்கத்தினுள் இருந்தநூற்றுக்கணக்கான புத்தக குவியலில், கலீல் ஜிப்ரானின் நெருங்கிய தோழரான லெபனான் நாட்டு எழுத்தாளர் மிகையீல் நைமி எழுதிய முதல் புத்தகமான “மிர்தாதின் புத்தகத்தை” தேடிக் கண்டுபிடிக்க உடன் இருந்த தோழமைகள் ஒத்துழைத்தது நெகிழ்வான தருணம்.

தீவிரமான பலதுறை தேடல்களை, ஆய்வுகளை, முற்போக்கு சார்ந்த வாழ்வியல் அணுகுமுறைகளை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு மட்டுமே புத்தகவாசிப்பு மிகவும் பேருதவியாக இருக்கும் என்கிற பொதுப்புத்தி உடைக்கப்பட்டு சாமான்யனுக்கும் புத்தக வாசிப்பு பழக்கம், அவனது சராசரி வாழ்வியலில் ஒன்றாக கலந்துவிட்டது என்பதை புத்தக கண்காட்சிக்கு வந்து போகும் வாசகர்களையும், ஆர்வலர்களையும் கணக்கில் கொண்டு அவர்கள் மன நிலையை துல்லியமாக நம்மால் கணக்கிட முடிந்தது.

புலம்பெயர்ந்து வாழும் எங்களை போன்ற தமிழர்கள் ஒருவரோடொருவர் சந்தித்துக் கொள்ளவும், உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளவும் வாய்ப்பான ஒரு நிகழ்வாக இந்த புத்தகக் கண்காட்சி இருந்தது.
அந்த விதத்தில் இந்த புத்தகத் திருவிழா அறிவுத்தேடலுடன் கூடிய இன்னொருவகையான நினைவுகளின் தேடல் என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு பண்பாட்டு பெருநிகழ்வில் சில மணி நேரங்கள்
செலவழித்தது பயனுள்ளது என்பேன்.

# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋 #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top