Close
செப்டம்பர் 20, 2024 4:24 காலை

கூட்டணிக்காக தமிழகத்திற்கு துரோகம் செய்யும் திமுக அரசு? தமாகா கண்டனம்

ஈரோடு

எம். யுவராஜா

கூட்டணிக்காக (இந்தியா) தமிழகத்திற்கு திமுக அரசு  துரோகம் செய்வதாக  தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் எம். யுவராஜா வெளியிட்ட அறிக்கை:

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 86 -ஆவது கூட்டம் டெல்லியில் நேற்று (12.09.2023) நடைபெற்றது. குழுவின் தலைவர் வினித்குப்தா தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 29 -ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மைக் கூட்டத்தில், வினாடிக்கு ஐந்தாயிரம் கன அடி நீரை 15 நாட்களுக்குத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதை நிறைவேற்றித் தரக்கோரி நேற்று காவிரி ஒழுங்காற்று குழுவில் தமிழகம் முறையிட்டது.

இதுகுறித்து கர்நாடக முதல்வர்  சித்தராமையா நேற்று தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு இல்லை. தமிழகத்தின் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று திட்டவட்டமாக  மறுத்துள்ளார்.

இப்பொழுது தமிழக விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் செய்யப் போவது என்ன? காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு இன்று வரை 102.30 டி.எம்.சி தண்ணீர் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் கர்நாடக இதுவரை 35 டி.எம்.சி தண்ணீரைக் கூட வழங்கவில்லை.

கர்நாடகத்திலிருந்து இதுவரை தமிழகத்திற்கு வந்த தண்ணீர் கூட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் வந்தது தவிர கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டது அல்ல.
ஏற்கெனவே மேக்கே தாட்டு அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அவர்களும் இந்திய கூட்டாட்சி தத்துவத் திற்கு எதிராக பேசி வருகின்றார்கள்.

கர்நாடக அரசின் இந்த நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது. கர்நாடக அணைகளில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்கப்படவில்லை என்றால், குறுவைப் பயிர்களைக் காப்பாற்றுவதற்கு வேறு வழியே இல்லை. ஆனால், இந்த சூழலை தமிழ்நாடு அரசு எவ்வாறு சமாளிக்கப்போகிறது?கர்நாடகத்திடமிருந்து எவ்வாறு தண்ணீர் பெறப் போகிறது? என்கிற மாபெரும் கேள்வி தமிழக விவசாயிகளிடம் எழுந்து நிற்கிறது.

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக முதல்வர், ஆளும் திமுக கட்சியும் தமிழக மக்களுக்கு என்ன செய்யப் போகிறது? என்பதை முதல்வர் தெளிவு படுத்த வேண்டும். கர்நாடகாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சி பக்கத்து மாநிலத்திற்கு தர வேண்டிய நியாமான, முறையான உரிமையை கூட தர மறுக்கும் சூழலில், இந்தியா கூட்டணி எப்படி  இந்தியாவை ஒருங்கிணைக்கப் போகின்றது  என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் பதில் அளிக்க வேண்டும்.

மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசை தேவையில்லாத காரணங்களுக்கு இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஒன்று சேர்ந்து எதிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகள், கர்நாடகாவின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக இந்தியா கூட்டணியில் குரல் கொடுக்காதது ஏன்?

தேர்தல் வரும்போது எல்லாம் பொய்யான வாக்குறுதியை கூறும் முதல்வர் ஸ்டாலின், நீட் விவகாரம் தலை எடுத்த போது இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து செய்யப்படும் என்கிறார். அடுத்து இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் காவிரியில் தண்ணீர் திறந்து விட ஆவண செய்வேன் என்று சொல்வார்களா  என்கிற எதிர்பார்ப்பும் தமிழக மக்களிடம் எழுந்துள்ளது.

அதுவரை தமிழக மக்களின் கதி என்னவாகும். ஒன்று தமிழகத்திற்கு தரவேண்டிய உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு ஆணையம் உத்தரவிட்டதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது கர்நாடக முதல்வர், துணை முதல்வரின்  சர்வாதிகாரப் பேச்சுக்கு எதிராக இந்தியா கூட்டணியை விட்டு  ஸ்டாலின்  விலக வேண்டும் என அந்த அறிக்கையில் தமாகா இளைஞரணி மாநிலத்தலைவர் எம். யுவராஜா தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top