Close
அக்டோபர் 5, 2024 10:29 மணி

ஆன்-லைன் ரம்மி தடைச்சட்டம் நீதிமன்றத்தால் ரத்து: எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்- சட்ட அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை

சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி

ஆன்லைனில் விளையாடப்படும் ரம்மி, போக்கர் விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டமசோதா நிறைவேற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர். அதில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சூதாட்ட தடை சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்க முடியாது. ஆனால், திறமை சார்ந்த ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு என்று கூறி தடை விதித்து தமிழக அரசு இயற்றிய சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேநேரம், அதிருஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து தமிழக அரசு பிறப்பித்த சட்டம் செல்லும். மேலும் ஆன்லைன் ரம்மி, போக்கர் ஆகியவற்றை விளையாடுவதற்கான வயது, நேரம் ஆகியவற்றை முறைப்படுத்தும் வகையில் அரசு புதிதாக விதிகளை உருவாக்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஆன்லைன் தடைச்சட்டத்திற்கு அரசாங்கம் சட்டம் இயற்றுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்பதை நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு அரசுக்கு உரிமை இல்லை என்று கூறியிருந்தார்.

நாங்கள் அவரிடம் எங்களுக்கு உரிமை உள்ளது என்பதை எடுத்துக் கூறியிருந்தோம். இந்நிலையில், நீதிமன்றம் நாங்கள் கூறியதைப் போல் அரசு சட்டம் ஏற்றுவதற்கு உரிமை உள்ளது என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

இணைய வழி சூதாட்டம் ஒழுங்குமுறை படுத்துதல் தடை செய்தல் என்பதுதான் அந்த சட்டத்திற்கு பெயர். ஒழுங்கு முறைப்படுத்துவது என்பது, எந்தெந்த விளையாட்டுகளை எப்படி ஒழுங்குமுறைபடுத்த வேண்டும் .அதற்கான குழுக்கள் அமைக்க வேண்டும் .அந்த குழுக்களுக்கு மனுக்கள் போட்டு பரிசீலினை செய்து ஒழுங்குமுறைப்படுத்தி அந்த இணைய வழி விளையாட்டுகளை விளையாட அனுமதிக்க வேண்டும் என்பது முதலாவது கட்டம்.

இரண்டாவது கட்டம், ரம்மி மற்றும் போகர். இந்த 2 விளையாட்டுகளையும் தடை செய்ய வேண்டும். ஏனென்றால் அதில் பெரும்பாலான மக்கள் பணத்தை இழந்து தற்கொலைக்கு ஆளாகிறார்கள். அதனால் போகர், ரம்மி இரண்டையும் தடை செய்ய வேண்டும் என்பதற்காக தனி பட்டியலில் அதை தந்துள்ளோம்.

எங்களைப் பொறுத்தவரை ரம்மிக்கும் ஆன்லைன் ரம்மிக்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது. ரம்மி என்பது திறமைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆன்லைன் ரம்மியில் திறமைக்கு வாய்ப்பில்லை. அது ஒரு ப்ரோக்ராம். விளையாட்டை எப்படி வேண்டுமென்றாலும் மாற்றி அமைக்கலாம் அது திறமை அடிப்படையில் வராது. அதனால் அதனை தடை செய்ய வேண்டும் என்பது எங்களின் கருத்து.

ஆனால், நாங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்றவாறு அந்த வாதத்தை முன்வைக்கவில்லையோ என்று நாங்கள் நினைக்கிறோமே தவிர தீர்ப்பை பற்றி எதுவும் சொல்ல முடியாது.  எங்களது வழக்கறிஞர்கள் வாதத்தை சிறப்பாக முன் வைத்திருந்தாலும் கூட நீதிபதி அந்தக்கருத்தை ஏற்றுக்கொள்ளும் வகையிலும் அவரை திருப்திபடுத்தும் வகையிலும் கருத்துகளை எடுத்து வைக்கவில்லையோ என்று எண்ணுவதைப் போல ஒரு தோற்றம்தான் வருகிறதே தவிர வேறு எதுவும் கிடையாது. தீர்ப்புகளைப் பற்றி விமர்சிக்கும் உரிமை எனக்கு கிடையாது.

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து சட்டத்துறை பரிசீலனை செய்யும். மேல்முறையீடு தேவை என்று சொன்னால் அதன்படி மேல்முறையீடு செய்வோம். சட்டத்துறை அரசு வழக்கறிஞர்களுடைய கருத்துகளைப் பெற்று அடுத்த நடவடிக்கை தொடரும்.

முறைப்படுத்துவது சட்டத்திலே உள்ளது: கமிட்டி அமைக்கின்றோம் அந்த விளையாட்டுகளை ஒழுங்குமுறை படுத்துகின்றோம். சட்டப்படி ஒழுங்குமுறை படுத்துகின்ற விளையாட்டுகளை முறைப்படுத்தி நடத்தப்படும். ரம்மிக்கும் போகருக்கும் வயது வரம்பு கால வரம்பு எல்லாம் நிர்ணயிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி எந்த அளவுக்கு பரிசீலனை செய்ய முடியுமோ அந்த அளவுக்கு பரிசீலனை செய்து எந்த அடிப்படையில் அவற்றையெல்லாம் நிறைவேற்ற முடியுமோ அதனை நாங்கள் செய்வோம்.

அரசியலில் பா.ஜ.க. கூறும் கருத்துகளை எல்லாம் தமிழ்நாடு மக்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை, இந்து சமய அறநிலையத்துறை என்பது தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயிலுடைய சொத்துகளை பாதுகாப்பதற்கும் அதை நிர்வகிக்க அறக்கட்டளை நியமிப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பையே எடுத்து விடுவோம் என்று சொன்னார்கள் என்றால் எந்த அடிப்படையில் அவர்கள் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.

எங்களை பொறுத்தவரை பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப்போவதில்லை. அதனால் இந்து சமய அறநிலையத் துறையை அவர்கள் எடுக்கப் போவதுமில்லை. போகிற போக்கில் எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு பாஜகவிற்கு உரிமை உண்டு. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப்போவது இல்லை என்பதால் என்ன வேண்டுமானாலும் அவர்கள் கூறலாம். சுதந்திர நாட்டில் கருத்து சொல்ல உரிமை உண்டு.

அண்ணாமலை தன்னை பற்றி பிறர் பேச வேண்டும் என்பதற்காக விமர்சனங்களை அவர் முன் வைக்கின்றார். தன்னை பிரபலப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே தவிர வேறு ஏதும் இல்லை.  ஒருவர் மீது பழியை சொல்லிவிட்டு போனால் அவர்கள் அதற்கு பதில் கூறுவார்கள். அதன் மூலம் தனக்கு விளம்பரம் கிடைக்கும் .தன்னுடைய எஜமானர்களை திருப்திபடுத்த முடியும் என்று அண்ணாமலை எண்ணுகிறார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top