Close
செப்டம்பர் 20, 2024 7:02 காலை

தமிழகத்துக்கு மூன்று முதலமைச்சர்களைத் தந்தும் முன்னேற்றம் காணாத தேனி மாவட்டம்..!.

தேனி

பாஜக நிர்வாகி டாக்டர் பாஸ்கரன்

தமிழகத்துக்கு மூன்று முதலமைச்சர்களைத் தந்தும் முன்னேற்றம் காணவில்லை என  தேனி மாவட்ட மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் தேனி மாவட்ட மக்களின் வேலை வாய்ப்புக்காக  ஜவுளிப்பூங்கா அமைப்பாரா என வேலை யின்றி தவிக்கும் பல்லாயிரக்கணக்கான  தொழிலாளர்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் மட்டும் 6 லட்சம் பேர் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இது தவிர தேனி மாவட்டத்தில் இருந்து மட்டும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திருப்பூரில் பல்வேறு ஜவுளி உற்பத்தி கம்பெனிகளில் பணிபுரிகின்றனர்.

மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் பல ஆயிரம் பேரும் வேலை வாய்ப்புக்காக திருப்பூரில் வசிக்கின்றனர். இவர்கள் திருப்பூரில் வீடு இல்லாமல் கோழிக்கூண்டு போல் கட்டப்பட்டிருக்கும் சிறிய குடியிருப்புகளில் அதிகளவு வாடகை கொடுத்து வசித்து வருகின்றனர்.

பகலில் கடுமையான பணிகளில் ஈடுபடும் இவர்கள் இரவில் நிம்மதியாக துாங்கவும், உடலுக்கு தேவையான உணவை சமைத்து சாப்பிடவும் கூட வசதியின்றி தவிக்கின்றனர். திருப்பூரில் தொழிற்சாலைகள் வளர்ந்த அளவுக்கு இ்ன்னமும் குடியிருப்புகளின் தரம் உயரவில்லை. இதனால் இந்த மக்கள் படும் துயரம் சொல்லி மாளாது.

தமிழக அரசியலை பொறுத்தவரை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பன்னீர்செல்வம் ஆகிய மூன்று முதல்வர்களை கொடுத்த பெருமைக்குரிய மாவட்டம் தேனி. குறிப்பாக 25 ஆண்டுக ளுக்கும் மேலாக அரசு நிர்வாகத்தில் பல முக்கிய பொறுப்பு களில் இருந்து வந்த முன்னாள் துணை முதல்வர் பன்னீர் செல்வம், மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை.

மூன்று முதல்வர்களை கொடுத்த மாவட்டம், தற்போது கடும் வேலை இல்லா திண்டாட்டத்தை   சந்தித்து வருகிறது. இங்குள்ள சிட்கோவில் நுழைந்தவர்கள் இவ்வளவு மோசமான நிலையில் ஒரு தொழிற்பேட்டையா என நொந்து போவார்கள்.

தவிர காங்கிரஸ்  ஆட்சி காலத்தில் ஆண்டிபட்டியில் தொடங்கப்பட்ட கைத்தறி தொழில்பூங்கா கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலைக்கு சென்றுவிட்டது.

இது தொடர்பாக பாஜக மருத்துவ அணி முக்கிய நிர்வாகி  டாக்டர் பாஸ்கரன் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் ஜவுளித்துறையில் பருத்தி விளையும் வளமான நிலம் பல ஆயிரம் ஏக்கர் உள்ளது. ஜின்னிங், ஸ்பின்னிங் மில்கள் அதிகளவில் உள்ளன. காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் கொள்முதல் மையம் இங்கு அமைக்கப்பட வேண்டும்.

பருத்தியில் இருந்து துணியாக மாற்றும் வரை இன்னும் சொல்லப்போனால் உடையாக மாற்றும் வரை அத்தனை தொழில்நுட்பங்களையும் முழுமையாக கற்றறிந்த திறன் வாய்ந்த தொழிலாளர்கள் பல ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு இந்த மாவட்டத்திலேயே வாய்ப்பு கொடுக்க ஜவுளிப்பூங்கா அமைக்கலாம்.

தமிழக அரசும் குறிப்பாக தேனி மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும். தேனி வடக்கு மாவட்ட திமுகசெயலாளர்தங்க.தமிழ்செல்வன்,  நாங்கள் என்ன தண்ணீரை அரபிக் கடலிலா ஒளித்து வைத் துள்ளோம் என பேட்டி அளித்திருந்தார்.

இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டத்தில் வழக்கமான மழையளவினை விட இந்த ஆண்டு அதிகம் மழை பெய்துள்ளது என அரசே ஒப்புக் கொண்டுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில், தந்தை பெரியார் வாய்க்கால், 18 -ஆம் கால்வாய் உட்பட எந்த துணை வாய்க் கால்களிலும் தண்ணீர் திறக்கவில்லை. அதிகாரிகளின்  நீர் மேலாண் மையில் திறமையின்மையை மறைக்க தங்க.தமிழ்செல்வன் ஏதோ ஒரு கதை சொல்லியிருக்கிறார்.

இதனால் தேவையில்லாமல் ஆளும் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும். ஆளும் கட்சிக்கு ஏற்பட்டுள்ள கெட்ட பெயரை மாற்ற இப்போது பெய்து வரும் பலத்த மழையில் கிடைக்கும் நீரையாவது முறையாக பயன்படுத்த வேண்டும்.

நீர் மேலாண்மையில் திமுக அரசு  கோட்டை விட்டதாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், அரசு நிர்வாகம் தொடர்பாக அரசியல் வாதிகள் கண்டபடி பேட்டி கொடுப்பதை முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும். நீர் மேலாண்மையில் அரசியல் செய்வது மிகப் பெரிய அபத்தம். அந்த தவறை திமுக  மிகவும் சரியாக செய்கிறது. இவ்வாறு கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top