Close
செப்டம்பர் 20, 2024 4:01 காலை

Parenting Tips: பெற்றோர்களேபொதுத்தேர்விற்கு உங்களது குழந்தைகளை இப்படி தயார்ப்படுத்துங்க!

ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கும் என்பதால் பொதுத்தேர்விற்குத் தயாராகும் உங்களது குழந்தைகளை அடுத்த மாணர்களுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது. 

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு இன்னும் சில நாள்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு மாணவர்களும் போட்டி போட்டுக் கொண்டு தயாராகி வருகின்றனர். மேலும் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆனாலும் ஒவ்வொரு பெற்றோர்களும்  குழந்தைகளின் படிப்பில் அதீத கவனம்  செலுத்த வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள அம்மாக்கள் தான் குழந்தைகளைப் பராமரிக்க அதீத மெனக்கெடுவார்கள். இப்படிப்பட்ட அம்மாக்களில் ஒருவராக நீங்கள்?  அப்படின்னா இதோ கொஞ்சம் நேரம் ஒதுக்கி இத படிச்சுப்பாருங்க நிச்சயம் உபயோகமாக இருக்கும்.

குழந்தைகளைத் தேர்விற்குத் தயார்ப்படுத்துவது எப்படி?

  • ஒவ்வொரு மாணவர்களின் உயர்கல்விக்கு அடித்தளமாக பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் என்பதால் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் படிக்கச் சொல்லி பெற்றோர்கள் வற்புறுத்துவார்கள். கொஞ்சம் நேரம் கூட மற்றவர்களுடன் பேசுவதற்கும், டிவி பார்ப்பதற்கும் அனுமதிக்க மாட்டார்கள். இதுவே மாணவர்களுக்கு தேர்வின் மீதான பயத்தை ஏற்படுத்தும். முதலில் இதைத் தவிர்ப்பது நல்லது.
  • அதற்கு மாறாக ஒவ்வொரு பெற்றோர்களும் பரிட்சைக்கு முன்னதாக மட்டுமல்ல, அதற்கு முன்னதாகவே அவர்களை பரீட்சைக்குத் தயார்படுத்த வேண்டும். தினமும் படிக்கும் பாடங்களைக் குறிப்புகளாக எழுதி வைப்பது நல்லது. தேர்வின் போது மாணவர்களுக்குப் பேருதவியாக அமையும் என்பதால் இந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது உபயோகமாக இருக்கும்.
  • பொதுத் தேர்வு சமயத்தில் மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற சூழலை அவர்கள் ஏற்படுத்திக் கொடுக்கவும். இதோடு அடிக்கடி மாணவர்களைப் படி படி என்று வற்புறுத்தக்கூடாது. இது அவர்களின் மனநிலையைப் பாதிக்கும் என்பதால் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

  • காலாண்டு, அரையாண்டு தேர்வு சமயத்தில் மதிப்பெண்கள் குறைவாக இருந்தாலும் உங்களுக்கு குழந்தைகளைத் திட்டாதீர்கள். ஏன்? எதற்கு? என முதலில் கேட்ட பின்னதாக உங்களால் அனைத்தும் முடியும் எதற்கும் தளராதீர்கள் என சொல்லுங்கள். மனம் தளரும்படி எதையும் பேச வேண்டாம். இத்தகைய செயல்கள் அவர்களின் திறன்களை ஊக்குவிப்பதற்கு உதவியாக இருக்கும்.
  • ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கும் என்பதால் பொதுத்தேர்விற்குத் தயாராகும் உங்களது குழந்தைகளை அடுத்த மாணர்களுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது.
  • நாள் முழுவதும் படித்தால், தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுவிடலாம் என்று நினைத்து இரவில் தூங்காமல் படிக்கச் சொல்லி பெற்றோர்கள் வற்புறுத்தக்கூடாது. இரவில் சீக்கிரம் தூங்க வேண்டும். 7-8 மணி நேரம் தூங்கினால் மட்டுமே மனம் அமைதியாக இருக்கும். இதோடு காலையில் சீக்கிரம் எழுந்துப் படிப்பதன் மூலம் அனைத்துப் பாடங்களும் எளிதில் படித்துவிட முடியும்.
  • பொதுத்தேர்விற்காக கண் முழித்துப் படிப்பதால் பொதுத்தேர்வு சமயத்தில் மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்படும். எனவே தேர்வு சமயத்தில் ஊட்டச்சத்துள்ள உணவுகளைக் கொடுக்க முயற்சி செய்யவும்.
  • இது போன்ற நடைமுறைப் பின்பற்றினாலே பொதுத் தேர்வு சமயத்தில் உங்களது குழந்தைகள் பதற்றம் இல்லாமல் தேர்வுகள் எழுத முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top