Close
செப்டம்பர் 19, 2024 10:54 மணி

முல்லை பெரியாறு அணையை பாதுகாக்க 10 நாள் நடை பயணம்..!

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம்.

முல்லைப் பெரியாறு அணையை பாதுகாப்பது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் கூறியதாவது: கேரளாவில் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக விஷமக்கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

கட்சி பாகுபாடு இன்றி கேரளாவில் எல்லோரும் பெரியாறு அணைக்கு எதிராக தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். தமிழக எம்.பி.,க்களோ, அரசியல் கட்சிகளோ பெரும் மௌனம் காத்து வருகின்றன. பெரியாறு அணையினை தமிழக அரசு கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

எனவே இந்த சிக்கலை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், தமிழக அரசு பெரியாறு அணை விஷயத்தில் தீவிரமாக செயல்பட வலியுறுத்தும் வகையிலும், கேரளாவில் நடத்தப்படும் விஷமப் பிரசாரங்களை கண்டித்தும், கேரள விஷமிகளை எச்சரிக்கும் வகையில் தமிழக விவசாயிகள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த உள்ளனர்.

இதற்காக குமுளி முதல் ஆண்டிபட்டி வரை 10 நாள் நடைபயணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் வரும் சனிக்கிழமை கம்பத்தில் நடைபெற உள்ளது. இந்த விழிப்புணர்வு மற்றும் கண்டன பேரணி குமுளியில் தொடங்கி 145 கிராமங்கள் வழியாக சென்று ஆண்டிபட்டியில் நிறைவடையும்.

10 நாட்களும் விவசாயிகள், விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் நடைபயணம் மேற்கொண்டு பெரியாறு அணை குறித்து மக்களிடம் உண்மை நிலையை விளக்கி கூற உள்ளனர். கேரளாவில் நடக்கும் அத்துமீறல்கள் குறித்தும் தமிழக மக்களிடம் வெளிப்படையாக தகவல்களை தெரிவிப்போம். இவ்வாறு கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top