நாமக்கல் :
மாநகராட்சியுடன் கிராம பஞ்சாயத்துக்குள் இணைப்பு காரணமாக, 100 நாள் வேலை வாய்ப்பு இல்லாமல் வாழ்வாதார பாதிக்கப்பட்டுள்ளதாக 4 கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
நாமக்கல் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்காக, பாப்பிநாயக்கன்பட்டி, காதப்பள்ளி, சிலுவம்பட்டி, வள்ளிபுரம், தொட்டிப்பட்டி, வகுரம்பட்டி, ரெட்டிப்பட்டி, வேட்டாம்பாடி, வீசாணம், மரூர்ப்பட்டி, லத்துவாடி உள்ளிட்ட 12 கிராம பஞ்சாயத்துக்கள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், அனைத்து வரிகளும் உயர்வதுடன், கூலி தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை பாதிக்கும் என்பதால், இணைப்புக்கு எதிராக பல கிராம மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், காதப்பள்ளி, வீசாணம், லத்துவாடி, பாப்பிநாயக்கன்பட்டி ஆகிய கிராம பஞ்சாயத்துக்களை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நாமக்கல் கலெக்டர் ஆபீசிற்கு வருகை தந்து, கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியுள்ளதாவது:
நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், காதப்பள்ளி, வீசாணம், பாப்பிநாயக்கன்பட்டி மற்றும் மோகனூர் ஒன்றியம் லத்துவாடி கிராம பஞ்சாயத்துக்களில் ஏராளமான குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராமங்களில் உள்ள 3,200க்கும் மேற்பட்ட, கூலித் தொழிலாளர்கள் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், அடையாள அட்டை பெற்று பணியாற்றி வருகிறோம்.
மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதால், இந்த வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டு, எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. அதனால், எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, எங்கள் கிராம பஞ்சாயத்துக்களை, நாமக்கல் மாநகராட்சியுடன் இணைப்பதை ரத்து செய்து, மீண்டும், 100 நாள் வேலை திட்டத்தை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.