நாமக்கல் :
நாமக்கல் அருகே பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத வந்த மாணவி, சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தார். தலைøயில் கட்டுப்போட்ட நிலையில் அவர் தேர்வு மையத்திற்கு வருகை தந்து தேர்வு எழுதினார்.
நாமக்கல் மாவட்டம், செல்லப்பம்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகா ஸ்ரீ (17). இவர், பொம்மைக்குட்டை மேட்டில் உள்ள காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இதற்கான தேர்வு மையம் செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ளது.
இன்று காலை பிளஸ் 2 தேர்வில், முதல் தேர்வான தமிழ் பாடத்தேர்வு எழுதுவதற்காக அவர் வீட்டில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றார். செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கினார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர், தலையில் கட்டுப்போட்டுக் கொண்டு, காலை 9.45 மணியளவில் தேர்வு மையத்திற்கு சென்றார்.
தலையில் காயத்துடன் மாணவி கார்த்திகாஸ்ரீ வந்ததைக் கண்ட, அங்கிருந்த கல்வித்துறை அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்று தேர்வு அறையில் அமர வைத்தனர். செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொள்வதற்காக திடீரென்று வந்த நாமக்கல் கலெக்டர் உமா, விபத்தில் சிக்கி தலையில் கட்டுப்போட்டவாறு தேர்வு எழுதிய மாணவியை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் தன்னம்பிக்கையுடன், தைரியமாக தேர்வு எழுதுமாறு அவர் ஊக்கப்படுத்தினார்.