Close
மார்ச் 4, 2025 10:40 மணி

தமிழக அரசின் கரும்பு விலை அறிவிப்பிற்கு விவசாயிகள் சங்கம் கடும் அதிருப்தி..!

நாமக்கல் வேலுசாமி, தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம்.

நாமக்கல் :

தமிழக அரசின் கரும்பு விலை அறிவிப்பு இனிக்கவில்லை. கரும்பு விலை நிர்ணயித்திற்கு விவசாயிகள் சங்கம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இது குறித்து நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசயிகள் சங்க மாநிலத்தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில், 2024-25 கரும்பு அரவை பருவத்திற்கான, கரும்புக் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழ்நாடு அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ளது. 9.50 சதவீதம் அல்லது அதற்கு குறைவான சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 3,151 எனவும், 9.85 சதவீதம் சர்க்கரைத் திறன் கரும்புக்கு ரூ. 3,267 ஆகவும், 10.10 சதவீதம் சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு ரூ. 3,344.20 ஆகவும், 10.65 சதவீதம் சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு ரூ. 3,532.80 ஆகவும் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கரும்பை பொறுத்தவரையில் ஒவ்வொரு பருவத்திற்கும் கொள்முதல் விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்யும். அதனை அடிப்படையாகக் கொண்டு மாநில அரசு ஆதார விலையை சேர்த்து விலையை நிர்ணயம் செய்யும்.

தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறையின் கீழ் 12 சர்க்கரை ஆலைகளும், 2 பொதுத்துறை ஆலைகளும், 16 தனியார் சர்க்கரை ஆலைகளும் தற்போது இயங்கி வருகிறது. திமுக கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் ஆட்சி பொறுப்பிற்கு வந்தவுடன் கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,000ம் விலை நிர்ணயம் செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளது.

ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் ஆகியும், தற்போது கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.116 மட்டுமே விலை உயர்த்தி நிர்ணயம் செய்திருப்பது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது. தற்போதைய நிலையில், கரும்பு உற்பத்திக்கான செலவினங்களை ஒப்பிடும் போது விவசாயிகளுக்கு இது கட்டுப்படியான விலையாக இல்லை, யானைப் பசிக்கு சோள பொரி கொடுப்பது போல் உள்ளது.

இதன்மூலம் பல கரும்பு விவசாயிகள் கரும்பு பயிருடுவதை கைவிட்டு வேறு பயிர் சாகுபடிக்கு செல்வார்கள். தமிழகத்தில் கரும்பு சாகுபடி குறைந்தால் சர்க்கரை ஆலைகள் மேலும் பாதிக்கப்படும். எனவே தமிழக அரசு மறு பரிசீலனை செய்து, அரசு கரும்பு விலையயை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்றும், தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top