Close
மார்ச் 20, 2025 1:29 காலை

உசிலம்பட்டியில் கழிவு நீர் தேங்கும் அவலம் : தேங்கிய நீரில் பெண்கள் நாற்று நட்டு நூதன போராட்டம்..!

தேங்கிய சாக்கடை கழிவுநீரில் நாற்று நட்டு போராட்டம் நடத்திய பெண்கள்.

உசிலம்பட்டி:

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சாக்கடை கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் வீடுகளில் தேங்கிய கழிவுநீரை வாளியில் இரைத்து வெளியேற்றும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதைக்கண்டித்து சாக்கடை நீரில் நாற்று நட்டு பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டு சிவன்காளைத்தேவர் தெரு, காளியம்மன் கோவில் தெருவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனிநபரின் பட்டா நிலம் வழியாக கழிவுநீர் கால்வாய் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் இந்த சாக்கடை கால்வாயை தனிநபர் இடைமறித்து வீடு கட்டிய சூழலில், சாக்கடை கழிவுநீர் வெளியேற முடியாத நிலை நீடிப்பதோடு, ஆங்காங்கே குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது.

இதனால், துர்நாற்றம் வீசி வருவதோடு, கொசு உற்பத்தியாகி நோய்களையும் பரப்பி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கனியம்மாள் என்பவரின் வீட்டின் முன்பு தேங்கியுள்ள சாக்கடை கழவுநீரை வாலி மூலம் தினசரி இரைத்து வெளியேற்றும் அவல நிலையில் வாழ்ந்து வருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும், இது குறித்து, நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்காத சூழலில், இந்த சாக்கடை நீரில் நாற்று நடும் நூதன போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள சாக்கடை கழிவு செல்வதற்கு புதிய கழிவுநீர் கால்வாய் அமைத்து நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top