Close
ஏப்ரல் 24, 2026 2:49 காலை

கரும்பு டன் ஒன்றுக்கு கொள்முதல் விலை ரூ. 4,000 : மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அறிவிப்பு..!

கோப்பு படம்

நாமக்கல் :
நடப்பு 2025-26ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கு, குறைந்தபட்ச ஆதார விலை, கரும்பு உற்பத்திக்கான சிறப்பு ஊக்கத் தொகையுடன் சேர்த்து, விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4,000 வழங்கப்படும் என மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஆலையின் நிர்வாக இயக்குனர் டி.ஆர்.ஓ., குப்புசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை உறுப்பிரன்களின் நலன் கருதி, நடப்பு 2024-25ம் ஆண்டு அரவைப் பருவத்தில், மத்திய அரசு அறிவித்துள்ள கரும்பு கிரயத் தொகை, டன் ஒன்றுக்கு ரூ. 3,151 ரூபாய் நிலுவையின்றி கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2024–25ம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு, ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த அங்கத்தினர்களுக்கு, மாநில அரசு வழங்கும் கரும்பு உற்பத்திக்கான சிறப்பு ஊக்கத் தொகையாக, டன் ஒன்றுக்கு ரூ. 349 வீதம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

மேலும், 2025-26ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் கரும்பு உற்பத்திக்கான சிறப்பு ஊக்கத் தொகையுடன் சேர்த்து கரும்பு கிரையத் தொகை டன் ஒன்றுக்கு ரூ. 4,000 வீதம், வழங்கப்படவுள்ளது.

தமிழக அரசு, கரும்பு உற்பத்திக்கான ஊக்கத் தொகை வழங்குவது மட்டுமின்றி, கரும்பு உற்பத்தி பரப்பை அதிகரிக்க, கரும்பு பயிரிடும் அங்கத்தினர்களுக்கு, சர்க்கரை ஆலை மூலம் புதிய ரக கரும்பு நடவு செய்ய, 50 சதவீதம் மானியத்தில், தமிழக வேளாண் பல்கலை மற்றும் கோவை கரும்பு இனபெருக்க நிறுவனம் மூலம், அறிமுகப்படுத்தியுள்ள கோ 18,009, கோ 14,012, கோ 86,032, கோ 11,015, கோ 13,339, கோ 09,356 வறட்சி, பூச்சி மற்றும் நோய் தாக்குதலை சமாளிக்கும் தன்மையுள்ள புதியரக விதை கரும்பு, திசு வளர்ப்பு நாற்றுகள் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.

2025-26ம் ஆண்டு, தமிழக அரசின் பட்ஜெட்டில், கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க மானியத் திட்டங்களான சொட்டு நீர் பாசனம் அமைத்து, 4.5 அடி அகலப்பாரில் பருசீவல் நாற்றுகள், ஒரு பரு கரணை நடவு, அகலப்பார் நடவு முறை சோகை பரப்புதல், சோகை துகளாக்குதல் ஆகியவற்றிற்கு, தனித்தனியே அங்கத்தினர்களுக்கு, ஆலை மூலம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மானிய விலையில் உயிர் உரங்கள், ஆலையில் தயாரிக்கப்படும் பயோ கம்போஸ்ட் இயற்கை உரம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாய அங்கத்தினர்கள் அனைவரும், அதிக பரப்பளவில் கரும்பு பயிரிட்டு, அனைத்து மானிய பலன்களையும் பெற்று பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top