நாமக்கல் :
ஐஐடி, ஜேஇஇ தேர்வில் தேசிய அளவில் 88வது இடமும், மாநில அளவில் 3ம் இடமும் பெற்று சாதனை படைத்த, நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவருக்கு, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தேசிய அளவில் உள்ள ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்லூரிகளில் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் நேற்று தேசிய தேர்வு முகமை மூலம் வெளியிடப்பட்டது. இதில், நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர் மைலானந்தன், தேசிய அளவில் 88-வது இடமும் (ஆல் இந்தியா ரேங்க்), மாநில அளவில் 3-ம் இடமும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதையொட்டி நேஷனல் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில், பள்ளி சேர்மன் சரவணன் கலந்துகொண்டு, மாணவர் மைலானத்தனுக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கிப் பாராட்டிப் பேசினார். அப்போது மாணவர் மைலானந்தனின் சாதனை பள்ளிக்கும், மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
மேலும், மற்ற மாணவர்களுக்கும் இது நல்ல ஊக்கமளிக்கும் எனக் கூறினார். பள்ளியின் மேல்நிலை வகுப்பு முதல்வர் விக்டர் பிரேம்குமார் உள்ளிட்டோர் மாணவருக்கு பாராட்டு தெரிவித்தினர். நிகழ்ச்சியில் பேசிய மாணவர் மைலானந்தன், நான் ஐஐடி மும்பை அல்லது ஐஐடி சென்னையில் சேர்ந்து படிக்க உள்ளதாக தெரிவித்தார்.