நாமக்கல் :
பரமத்தி வேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் சேலம் சரக போலீஸ் டிஐஜி, நாமக்கல் எஸ்பி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம், ப. வேலூர் அருகில் உள்ள, கொளத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமியாத்தாள் (67). கணவர் இறந்து விட்டதால் சாமியாத்தாள் தனியாக வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் சாமியாத்தாள் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டினுள் நுழைந்த மர்ம நபர்கள் சாமியாத்தாளை கத்தியாள் குத்திவிட்டு தப்பி தலைமறைவாகினர். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சம்பவ இடத்தில் சேலம் சரக டிஐஜி உமா, நாமக்கல் போலீஸ் எஸ்.பி. ராஜேஸ்கண்ணன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் மூதாட்டியின் வீட்டில் இருந்த நகை, பணம் அப்படியே இருந்துள்ளது. மேலும், அவர் அணிந்திருந்த கம்மல் உள்ளிட்டவையும் அப்படியே இருந்தது. கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
இச் சம்பவம் தொடர்பாக நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ப.வேலூர் டிஎஸ்பி சங்கீதா மேற்பார்வையில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.