நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 24ம் தேதி நாமக்கல்லில் நடைபெறுகிறது.
இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு, ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் வகையில், திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம், வருகிற 24ம் தேதி காலை 10 மணிக்கு, நாமக்கல் துறையூர் ரோட்டில் உள்ள, மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாமில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, ஸ்மார்ட் ரேஷன் கார்டு, முதலமைச்சரின் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவை இல்லாதவர்களுக்கு, இவை அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் இந்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சிறப்பு முகாமிற்கு வருகை புரியும் திருநங்கைகள் அனைவரும் தங்களின் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வீட்டு வரி ரசீது, பேங்க் பாஸ்புக் உள்ளிட்ட அனைத்து ஆவனங்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.