நாமக்கல் :
நாமக்கல் மாவட்டத்தில், புதிய விரிவான மினி பஸ் திட்டத்தின் கீழ் 15 வழித்தடங்களில் மினி பஸ் சேவையை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், தஞ்சை மாவட்டத்தில், போக்குவரத்துத் துறை சார்பில், புதிய விரிவான திட்டத்தின் கீழ் மினிபஸ் இயக்கத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், புதிய மினி பஸ்கள் இயக்கம் துவக்க விழா நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், புதிய மினி பஸ்களின் இயக்கத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், புதிய விரிவான மினி பஸ் திட்டத்தின் படி, முதற்கட்டமாக புதிய வழித்தடங்களில் 6 பஸ்கள், இடப்பெயர்வு வழித்தடங்களில் 9 பஸ்கள் என மொத்தம், 15 மினி பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடம், 25 கி.மீ. வரை, 65 சதவீதத்திற்கு குறைவில்லாமல், ஏற்கனவே பஸ்கள் செல்லாத இடங்களுக்கு செல்லும் வகையில் இயக்கப்படும்.
மேலும், புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும். விண்ணப்பங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு அரசு உத்தரவுப்படி, புதிய வழித்தடத்திற்கு பர்மிட் வழங்கப்படும். அனைத்து மினி பஸ்களும், அரசு உத்தரவுப்படி புதிய கட்டணம் வசூலிக்க வேண்டும். குறைந்த பட்சம் 2 கி.மீ. வரை ரூ. 4, அதிக பட்சம் 24 முதல் 26 கி.மீ., வரை ரூ. 11 வசூலிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், போக்குவரத்து துணை கமிஷனர் செல்வகுமார், ஆர்டிஓக்கள் முருகேசன், மாதவன், மோகனபிரியா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.