நாமக்கல்:
தமிழகத்தில் கடந்த, 5 மாதங்களில், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட, 56 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து, 878 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என, சிவில் சப்ளைஸ் ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா கூறினார்.
நாமக்கல் அடுத்த கீரம்பூரில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் அலுவலகத்தை, தமிழ்நாடு சிவில் சப்ளை மற்றும் உணவு வழங்கல் துறை ஐ.ஜி., ரூபேஷ் குமார் மீனா, நேற்று திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது, நாமக்கல்லில் குடிமை பொருள் வழங்கல் துறையை சேர்ந்த கூட்டுறவு சார் பதிவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், ரேஷன் அரிசி உள்ளிட்ட, அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் தடுப்பை தடுக்க தொடர்ச்சியாக வாகன தனிக்கை செய்யவும், ரேஷன் கடைகளில் சோதனை மேற்கொள்ளவும், கடத்தல் குறித்து தகவல் தெரிந்தால், ஒன்றிணைந்து தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில், மண்டல வாரியாக, 4 குழுக்களாக பிரிந்து, குடிமைப் பொருள் வழங்கல் குற்றச்சம்பவங்களை தடுப்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றோம். திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில், ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. தற்போது, நாமக்கல் மாவட்டத்தில், ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில், கடந்த 5 மாதங்களில், 56 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 1.06 கோடி மதிப்பில், 878 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை, 5,120 வழக்குகள் பதிவு செய்யட்டு, 4,608 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், 434 நான்கு சக்கர வாகனங்கள் உள்பட, 1,099 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநில எல்லையோர மாவட்டங்களில், அதிக அளவில் அரிசி கடத்தல் சம்பவம் நடக்கிறது. எல்லையோர மாவட்டங்களில் ரேஷன் அரிசி அதிகளவு கடத்தப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். அதே போல், கோழிப் பண்ணைகளில் ரேஷன் அரிசி பயன்படுத்தினால், அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். டி.எஸ்.பி., ராஜபாண்டியன், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், எஸ்.ஐ. கண்ணாகாந்தி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




