Close
மார்ச் 7, 2026 2:51 மணி

சாலை விபத்து ஏற்பட்டால் லாரிகளை நிறுத்தும் உத்தரவை வாபஸ் பெற வேண்டும் : மாநில லாரி சம்மேளனம் கோரிக்கை..!

தமிழ்நாடு

லாரிகள் -கோப்பு படம்

நாமக்கல்:

சாலை விபத்து ஏற்பட்டால் லாரிகளை 100 நாட்கள் நிறுத்தி வைக்கும் உத்தரவை, வாபஸ் பெற வேண்டும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு நாடு உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ், செயலாளர் ராமசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சென்னைக்கு அருகில் சில நாட்களுக்கு முன் டூ வீலரில் பெண் ஒருவர் குழந்தையுடன் பயணித்துள்ளார். டூ வீலரில் பயணித்த குழந்தை தவறி விழுந்து பின்னால் வந்த லாரியில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இச்சம்பவத்தையடுத்து சென்னை சிட்டி போலீஸ் கமிஷனர், காவல்துறைக்கு, விபத்து மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்களுக்கு பின்தான் திருப்பி ஒப்படைக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மனித உயிர்களின் மதிப்பை லாரி உரிமையாளர்களும், டிரைவர்களும் நன்கு அறிவோம். சாலை விபத்து என்பது எதிர்பாராமல் நடைபெறுவது. லாரி டிரைவரோ, பொதுமக்களோ வேண்டுமென்று விபத்தை ஏற்படுத்துவதில்லை. லாரியை ஓட்டிச்செல்லும் டிரைவரோ, ரோட்டில் செல்பவர்களோ தங்களை அறியாமல் செய்யும் சிறு தவறால் விபத்து ஏற்படுகிறது. எனவே, லாரி உரிமையாளர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், ஒரு விபத்து நடைபெற்றால் 100 நாட்கள் லாரியை விடுவிக்கக் கூடாது என உத்தரவிடுவது ஏற்புடையதல்ல.

விபத்து நடைபெற்றால் முறையான விசாரணைக்கு பிறகு குற்றம் இருப்பின் குற்றவாளிக்கு அதற்கான தண்டனையை வழங்க வேண்டும். 100 நாட்கள் ஒரு வாகனத்தை நிறுத்தி வைப்பதினால் அதன் உரிமையாளர் வாகனத்தின் மாதாந்திர கடன் தவணைத் தொகை, தனது குடும்பத்தின் வாழ்வாதாரம் என கடும் நிதிச்சுமைக்கு உள்ளாவார்கள். எனவே, இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top