Close
மார்ச் 7, 2026 8:19 மணி

நாமக்கல்லில் நவீன ஆவின் பால் பண்ணை இயந்திரம் : அமைச்சர் துவக்கிவைப்பு..!

நாமக்கல்லில் ரூ. 90 கோடி மதிப்பில் அமைய உள்ள, நவீன ஆவில் பால் பண்ணைக்கான இயந்திரங்கள் நிறுவும் பணியை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார். அருகில் ராஜேஷ்குமார், எம்.பி., ராமலிங்கம் எம்எல்ஏ., ஆகியோர்.

நாமக்கல் :

நாமக்கல்லில் ரூ. 90 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும், அதிநவீன ஆவின் பால் பதன ஆலைக்கான இயந்திரங்கள் நிறுவும் பணியை, அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு, 2022-23-ம் ஆண்டு பால்வளத்துறை மானிய கோரிக்கையின்போது, நாமக்கல் மாவட்டத்தில் 2 லட்சம் லிட்டர் கையாளும் திறன் கொண்ட தானியங்கி நவீன பால்பண்ணை கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதையடுத்து, 2024, அக். 22ல், தமிழக முதல்வரால், பால்பதன ஆலை அமைப்பதற்காக கட்டிட பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது.

எம்.பி., ராஜேஸ்குமார், கலெக்டர் ஆகியோர் அவ்வப்போது ஆய்வு செய்து, உரிய ஆலோசனைகள் வழங்கி, கட்டுமானப் பணி மற்றும் தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, நவீன பால் பண்ணைக்கான, இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, இயந்திரங்கள் நிறுவும் பணி தொடங்கியது.

எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகரட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், ரூ. 90 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும், அதிநவீன ஆவின் பால்பதன ஆலைக்கான இயந்திரங்கள் நிறுவும் பணியை தொடங்கி வைத்தார்.

நவீன பால் பதன ஆலை அமைக்கும் பணி முழுமையாக நிறைவு செய்யப்பட்டு, இதற்கான சோதனை ஓட்டம், வரும், நவம்பரில், மேற்கொள்ளப்பட்டு, டிசம்பருக்குள் அனைத்து பணிகளும் முடிவு பெறும் என, நாமக்கல் ஆவின் பால்பண்ணை கட்டுமான பணியை மேற்கொண்டு வரும், தேசிய பால்வள வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், 2026, ஜனவரி மாதம், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய பால் பதன ஆலை மூலம் தயாரிக்கப்படும்

பால் மற்றும் பால் உப பொருட்கள், மக்கள் பயன்பாட்டிற்கு சென்றடையும் வகையில், பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், புதிய பால்பண்ணை பயன்பாட்டிற்கு வரும்போது, மாவட்டத்தில் உள்ள 15,000 பால் உற்பத்தியாளர்கள், 5 லட்சம் நுகர்வோர்கள் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் மாநகராட்சி துணை மேயர் பூபதி, கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வராஜ், ஆவின் பொது மேலாளர் சண்முகம், பால்வளம் துணைப்பதிவாளர் சண்முகநதி, மோகனூர் அட்மா தலைவர் நவலடி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top