நாமக்கல்,:
நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை டிஆர்ஓ வழங்கினார்.
நாமக்கல் கலெக்டர் ஆபீசில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. டிஆர்ஓ சுமன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 540 மனுக்கள் வரப்பெற்றன.
அவற்றை பரிசீலனை செய்து சம்மந்தப்ப அலுவலர்களிடம் வழங்கி, மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 மாற்றுத்திறனாளிக்கு ரூ. 11,710 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை டிஆர்ஓ சுமன் வழங்கினார்.
கூட்டத்தில், சமூகப்பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் பிரபாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் கிருஷ்ணவேணி, ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.




