நாமக்கல்:
நாமக்கல் அவுட்டர் ரிங் ரோட்டில் ரூ. 70 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் துவக்க விழா நடைபெற்றது.
கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை துவக்கி வைத்தனர்.
பின்னர் ராஜேஷ்குமார் எம்.பி., கூறியதாவது:
நாமக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சேந்தமங்கலம் ரோட்டில் வேட்டாம்படி, துறையூர் ரோட்டில் கூலிப்பட்டி, திருச்சி ரோட்டில் வேப்பனம், மோகனூர் ரோட்டில் லத்துவாடி வழியாக சென்று, பரமத்தி ரோட்டில் வள்ளிபுரம் அருகே கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் சுமார் 23 கி.மீ. தூரம் அவுட்டர் ரிங் ரோடு அமைக்கும் பணிக்கு, சுமார் 300 கோடி மதிப்பில் தமிழக முதலமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தற்போது முதல் 3 கட்டப்பணிகள் 90 சதவீதம் அளவிற்கு முடிவுற்றுள்ளன. இரண்டாம் கட்டப்பணியில் மரூர்ப்பட்டி பஞ்சாயத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு ரயில்வே துறை தொழில்நுட்ப அனுமதி அளித்துள்ளது. இதையொட்டி தமிழக நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ. 70 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்க தமிழக முதல்வர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆகியோர் ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு செய்து இன்று பணி துவக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 மாதங்களில் இந்த மேம்பாலப்பணிகள் முடிவுற்று, நாமக்கல் சேலம் ரோட்டில் இருந்து, திருச்சி ரோடு வரை பஸ்கள், கார்கள், லாரிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், நாமக்கல் நகருக்குள் வராமல் அவுட்டர் ரிங் ரோடு வழியாக செல்ல முடியும். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். தமிழக முதல்வரின் அறிவிப்பின் பேரில் விரைவில் நாமக்கல் – திருச்சி ரோட்டில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணி துவங்க உள்ளது.
மேலும் மோகனூர் ரோட்டில் ஆவின் மூலம் நவீன பால் பண்ணை அமைக்கும் பணி முடிவுறும் நிலையில் உள்ளது. இந்த ரிங் ரோட்டின் மூலம் நாமக்கல் நகரில் தொழில் வளம் பெருகும், விபத்துகள் குறையும் என அவர் கூறினார். நாமக்கல் மாநகர மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




