நாமக்கல் :
மேட்டூர் அணை உபரி நீரை திருமணி முத்தாறு மற்றும் வசிஷ்ட நதிக்கு செல்லும் திட்டத்தை, தமிழக அரசு உடனடியாக துவக்க வேண்டும் என கொமதேக பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன், எம்எல்ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மேட்டூர் அணை மற்றும் பவானிசாகர் அணைகள் மழைக்காலங்களில் நிரம்பும்போது உபரி நீர் வீணாக கடலில் கலப்பது தொடர்ந்து நடைபெறுகிறது. மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை தற்போதே எட்டியுள்ளது. இனி வரும் மழைக்காலத்தில் அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தையும் கடலுக்கு திறந்து விடுவதை தவிர வேறு வழியில்லாமல் இருக்கிறது. மேட்டூர் அணை நிரம்பி உபரியாக வருகின்ற தண்ணீரை பல வழிகளில் பயன்படுத்துகின்ற வாய்ப்பு இருந்தும் அதை பயன்படுத்தாமல் ஏமாந்து கொண்டிருக்கின்றோம்.
50 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட காவிரி & திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றிருந்தால் உபரிநீரை சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளுக்கு கொண்டு சென்றிருக்க முடியும். ஆனால் அந்தத் திட்டம் இதுவரை துவங்கப்படவே இல்லை. இப்போதாவது தமிழ்நாடு அரசு திருமணிமுத்தாறு திட்டத்தை துவங்க முன்வர வேண்டும்.
மேலும், மேட்டூர் அணையிலிருந்து, மேட்டூர் உபரி நீர் திட்டத்தை உருவாக்கி அந்தியூர், பவானி போன்ற ஈரோடு மாவட்டங்களின் வறண்ட பகுதிகளை வளப்படுத்த முடியும். இது போன்ற பல்வேறு திட்டங்கள் பல ஆண்டுகளாக பேசப்பட்டாலும் துவங்கப்படவில்லை. மேட்டூர் அணையின் உபரி நீரை வசிஷ்ட நதி வரை கொண்டு செல்கின்ற திட்டமும் பல ஆண்டுகள் கிடப்பில் உள்ளது. இதை நிறைவேற்றினால் சேலம் மாவட்டத்தின் ஆத்தூர் போன்ற பகுதிகளையும், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளையும் செழிப்பாக்க முடியும்.
மேட்டூர் அணை என்பது தமிழ்நாட்டுக்கு கிடைத்திருக்கின்ற வரப்பிரசாதம். மேட்டூர் அணையின் நீர் மேலாண்மையின் மூலம், உபரீ நீரைக்கொண்டு தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளை வளப்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஒருமுறை உபரி நீரை கொண்டு குளங்கள் நிரப்பப்பட்டு விட்டால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, 2 ஆண்டுகள் வரை அந்தப் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது.
தமிழக அரசு நீர்வளத்துறை நிபுணர்களைக் கொண்டு ஒரு குழுவை அமைத்து, இதற்கான வாய்ப்புகளை ஆராய வேண்டும். அவிநாசி & அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியது போல மேட்டூர் அணையின் உபரிநீரை பயன்படுத்துகின்ற திட்டங்களை உடனே துவங்க அரசு முன்வர வேண்டும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.




