நாமக்கல் :
தி.மு.க.,வில் உறுப்பினராக சேர ஆளில்லை. நாங்கள் கிராம் கிராமமாக சென்று, 2 கோடி பேரை உறுப்பினராக சேர்த்துள்ளோம் என, முன்னாள் அதிமுக அமைச்சர் கூறினார்.
இது குறித்து, மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, எம்எல்ஏ., நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான இ.பி.எஸ்., பிறந்த நாளையொட்டி, நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி, தற்போது, மாவட்ட மகளிரணி சார்பில், திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. இ.பி.எஸ்., நலமுடன் வாழவேண்டும். வரும், 2026 சட்டசபை தேர்தலில், மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து, வீடு வீடாக சென்று அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பிரச்சாரம் செய்வது என உறுதிமொழி எடுக்கப்பட்டது.
ஓரணியில் தமிழ்நாடு என்று, தி.மு.க. வீடு வீடாக செல்வதற்கு, அதிக அளவில் அக்கட்சியில் உறுப்பினர்கள் சேரவில்லை என்பதையே காட்டுகிறது. இல்லையென்றால், வீடுகளுக்கே சென்று உறுப்பினராக சேர்க்க வேண்டிய அவசியமில்லை. நாங்கள் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு கிராமத்தில் பொது இடத்தில் உட்கார்ந்து, கிட்டத்தட்ட 2 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்த்துள்ளோம்.
அந்த கட்சியில் சேர யாருக்கும் விருப்பம் இல்லை என்பதால், வீடு வீடாக சென்று கட்சியில் உறுப்பினராக சேர வேண்டும் என வற்புறுத்தி, சேர்த்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் அமைச்சர் சரோஜா, எம்.எல்.ஏ., சேகர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.




