Close
மார்ச் 7, 2026 2:51 மணி

அரசு மகளிர் கல்லூரி முதலாண்டு மாணவிகளுக்கு ஓரியண்டேஷன் பயிற்சி துவக்கம்: கலெக்டர் பங்கேற்பு..!

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில், ஓரியண்டேஷன் பயிற்சி வகுப்பை, கலெக்டர் துர்கா மூர்த்தி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

நாமக்கல் :

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதலாண்டு மாணவிகளுக்கான ஒருவார கால அறிமுகப் பயிற்சி (ஓரியண்டேஷன் புரோகிராம்) துவக்க விழா நடைபெற்றது.

கலெக்டர் துர்கா மூர்த்தி, பயிற்சியை துவக்கி வைத்துப் பேசியதாவது:

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு கலைக்கல்லூரியில், முதலாண்டு பட்ட வகுப்பில் சேர்ந்துள்ள மாணவிகளுக்கு, உயர்கல்வி குறித்த அரசின் திட்டங்களையும், கல்லூரி சார்ந்த அனைத்து தகவல்கள் மற்றும் விதிமுறைகளையும் எடுத்துரைக்கும் வகையில் ஒருவார காலம் அறிமுகப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இது மேல்நிலைப் பள்ளியிலிருந்து உயர்கல்வி சூழலுக்கு மாணவர்கள் சீராக மாறுவதற்கும், அவர்களின் கல்லூரிப் பயணத்தை வெற்றிகரமாக வழிநடத்த தேவையான தகவல்களைப் பெறுவதற்கும் வடிவமைக்கப்பட்ட விரிவான திட்டமாகும்.

மேலும், கல்வி அமைப்பு, விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள், பாடத்திட்டம், தேர்வு, மதிப்பீட்டு முறைகள், கிடைக்கக்கூடிய வளங்கள், மாணவர் ஆதரவு சேவைகள் மற்றும் மாணவர்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் மாணவர்களைப் பழக்கப்படுத்துதல் போன்ற கல்லூரி வாழ்க்கைக்கு ஒரு விரிவான அறிமுகத்தை இப்பயிற்சி வழங்குகிறது. இந்த ஒரு வார கால பயிற்சியில் நிறுவனத்தின் பொதுவான தகவல், கல்வி அமைப்பு, துறைகள், பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறைகள், கல்வி நாட்காட்டி, பாடநெறி பதிவு மற்றும் தர நிர்ணய முறை போன்ற முக்கியமான அம்சங்கள் வழங்கப்படுகிறது.

மேலும், மாணவர் ஆதரவு அமைப்புகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு, மனித உரிமைகள், ராகிங் எதிர்ப்பு, பாலியல் துன்புறுத்தல் எதிர்ப்பு, போதைப்பொருள் எதிர்ப்பு, போஷ், ஐசிசி போன்ற முக்கியமான அம்சங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசு திட்டங்கள், ஸ்காலர்ஷிப் உதவிகள், வேலை வாய்ப்புகள் போன்றவை குறித்து விளக்கி கூறப்படும். மாணவிகள் உயர்கல்வி பயின்று, வேலைக்கு செல்வது மட்டுமல்லாமல், உங்களது முயற்சியை கைவிடாமல், வாழ்வில் மேன்மேலும் உயர வேண்டும் என கூறினார்.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் கோவிந்தராஜூ, பொருளாதாரத் துறைத் தலைவர் புவனேஸ்வரி மற்றும் பேராசிரியர்கள், முதலாண்டு மாணவியர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top