போலீசாருக்கு வழங்கியுள்ள அதிகாரம் பொதுமக்களை பாதுகாக்கதான் அதை அவர்கள் உணர வேண்டும் என ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறினார்.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் எழுதிய கடைசித் தறியில் கண்டாங்கிச் சேலை எனும் புத்தகம் வெளியீட்டு விழா நாமக்கல் அருகே லத்துவாடி நம்பிக்கை இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சகாயம் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற போலீஸ் கஸ்டடி மரணம் எந்த சூழலிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் மக்களை பாதுகாக்கத்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
இதில் தமிழக முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். போலீசாரே அத்துமீறிய செயலில் ஈடுபடக்கூடாது. இதில் கவனம் செலுத்தவில்லையெனில் ஆட்சிக்கு பெரிய அவப்பெயர் வந்துவிடும்.
தமிழ் மொழி உலகில் உள்ள மூத்த மொழிகளில் ஒன்று. வட மொழிக்கு அளிக்கும் நிதி உயர்வாக இருக்கும்போது அதில் பாதி கூட தமிழுக்கு நிதி ஒதுக்காதது ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே வட மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கும் நிதியைக் காட்டிலும் கூடுதல் நிதியை தமிழ் மொழிக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.
தேர்தலைத் தாண்டி சிந்திப்பதுதான் தமிழகத்தின் இன்றைய தேவையாகும். இதன்படி நாங்கள் தேர்தல் அரசியலை தாண்டி தான் சிந்திக்கிறோம். தேர்தல் என்றால் அதிக செலவு செய்ய வேண்டும் என மாற்றிவிட்டனர். பொதுச்சொத்துகளில் இருந்து எடுத்துக் கொண்டவர்கள் தான் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஓட்டுக்கு பணம் கொடுத்து தேர்தலை சந்திப்பது நல்லது இல்லை. தேர்தலை தாண்டிய விழிப்புணர்வு கூடிய தமிழக மக்களை நோக்கி நாங்கள் பயணிக்கின்றோம்.
தமிழர்களின் வரலாறு தொன்மையானது. அதன் மகத்தான வெளிப்பாடுதான் கீழடியில் கிடைக்கக்கூடிய வரலாற்று செல்வங்கள். அதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுககளுக்கு உள்ளது. மத்திய அரசு மாற்றந்தாய் மனப்பாங்கோடு நடந்து கொண்டு வரலாற்றை மறைப்பதை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தமிழர்கள் ஏற்கனவே விழிப்புணர்வு உடையவர்கள். எனவே மாற்றாந்தாய் மனப்பாங்கோடு நடப்பதை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.




