Close
மார்ச் 7, 2026 6:03 மணி

மகளிர் உரிமைத்தொகை பெறாமல் விடுபட்டவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்கலாம்: ராஜேஷ்குமார் எம்.பி. தகவல்

நாமக்கல் சின்னமுதலைப்பட்டியில், வீடு வீடாகச்சென்று, உங்களுடன் ஸ்டாலின் முகாம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கும் பணியை, ராஜேஷ்குமார், எம்.பி., துவக்கி வைத்தார்.

மகளிர் உரிமைத்தொகை பெறாமல் விடுபட்ட, தகுதியான பெண்கள், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்கலாம் என ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்தார்.

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, சின்ன முதலைப்பட்டியில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் தொடர்பாக, வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர்  துர்காமூர்த்தி தலைமை வகித்தார்.

நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், மாநகர மேயர் கலாநிதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, பொதுமக்களுக்கு, உங்களுடன் ஸ்டாலின் விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம்  கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரசின் மூலமாக பெறக்கூடிய சேவைகள் அனைத்தும் முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், தற்போது, உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் மனுக்களைப் பெற்று, மக்களின் குறைகளை உடனுக்குடன் களையக்கூய வகையில் தமிழ்நாடு முழுவதும் முகாம்கள் நடைபெறவுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 238 சிறப்பு முகாம்கள் வருகிற 15ம் தேதி தொடங்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக 30.9.2025 வரை 40 நாட்கள் நடைபெறவுள்ளது.

இம்முகாம் மூலம் மக்களுக்கு வழங்கப்படவுள்ள அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்கள், முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தற்போது, மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகிறது.

மேலும் இந்த முகாம்களில் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.

முகாம்களில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெற வேண்டும் என அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், துணை மேயர் பூபதி, மகளிர் திட்ட இயக்குநர் செல்வராசு, மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top