நாமக்கல் :
தமிழக அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள், அரசு திட்டங்களை மக்களிடையே கொண்ட சேர்க்கும் தூதுவர்களாக செயல்பட வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், அரசு திட்டப்பணிகள் துவக்க விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்றுலாத்துறை அமைசசர் ராஜேந்திரன், ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு அரசு துறைகளின் சார்பில் ரூ. 87.38 கோடி மதிப்பீட்டில் 139 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ. 10.80 கோடியில் முடிவுற்ற 36 திட்டப் பணிகளை துவங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு துறைகளில் சார்பில் 2,099 பயனாளிகளுக்கு ரூ. 40 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முதற்கட்டமாக நகர்ப்புற பட்டாக்கள் மற்றும் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். மொத்தம் ரூ. 131 கோடியே 36 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதல்வர், நாமக்கல் மாவட்ட 4 ஆண்டு அரசு சாதனை விளக்க மலரை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நலத்திட்டங்களை அளித்து வரும், தமிழக அரசு ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, மகளிர் முன்னேற்றத்தில், தமிழக அரசின் திட்டங்களை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், முதல்வர் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான விடியல் பயணத் திட்டம். இதன்மூலம் 4 ஆண்டுகளில், இதுவரை தமிழ்நாடு முழுவதும் 730 கோடி முறை கட்டணமின்றி மகளிர் பயணம் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 15 கோடியே 80 லட்சம் முறை பெண்கள் அரசு பஸ்களில் கட்டணமின்றி பயணம் செய்துள்ளனர். அரசு பள்ளிகளில் படித்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உயர் கல்வி படிக்க புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதம் ரூ. ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் இத்திட்டத்தில் 8 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் இத்திட்டங்களில் 40 ஆயிரம் மாணவ மாணவிகள் மாதம்தோறும் ரூ. 1,000 பெற்று வருகின்றனர்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம், தமிழகத்தில் 20 லட்சம் அரசு பள்ளிக் குழந்தைகள் நாள்தோறும் பயன் அடைகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் தினசரி 40 ஆயிரம் குழந்தைகள் இத்திட்டத்தில் காலை உணவு சாப்பிடுகிறார்கள். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் கடந்த 22 மாதங்களில் மாநிலம் முழுவதும் ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயனடைகின்றனர். இந்த திட்டத்தில் புதிதாக மேலும், பெண்கள் பயன்பெறுவதற்காக விதிமுறைகளை தளர்த்தி, அரசு வழிவகை செய்துள்ளது. பொதுமக்களின் வசிப்பிடத்திற்காக பட்டா பெறுவதை சட்டபூர்வமான உரிமையாக தமிழ்நாடு அரசு நிலைநாட்டி உள்ளது. எல்லோருக்கும் எளிதாக பட்டா கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழகம் முழுவதும் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த 4 ஆண்டு திமுக ஆட்சியில், நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் அவுட்டர் ரிங் ரோடு, முதல்முறையாக போதமலை கிராமத்திற்கு ரூ. 149 கோடி மதிப்பீட்டில் சாலை வசதி, 33 ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கப்பட்டுள்ளது, ரூ. 90 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் ஆவின் பால்பண்ணை, நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய 3 தொகுதிகளிலும் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அரசு என்றும் துணையாக இருப்பதைப் போல, மக்களும் இந்த அரசுக்கும் முதலமைச்சருக்கும் துணையாக இருக்க வேண்டும். அரசின் திட்டங்களை நீங்கள் பிறருக்கு எடுத்துக் கூறி, இந்த அரசின் தூதுவர்களாக அத்தனை பேரும் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
முன்னதாக கலெக்டர் ஆபீசில் நடைபெற்ற, மாவட்ட அளவிலான அரசு திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி கலந்துகொண்டு, பணிகளை ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நிகழ்ச்சியில் நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன், ஈரோடு எம்.பி. பிரகாஷ், நாமக்கல் மாநகர மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




