நாமக்கல் :
தமிழகத்தில் ஒரு வேளை அதிமுக ஆட்சி அமைந்திருந்தால், தற்போது தமிழகத்தில் பாதிபேர் இந்தியில் பேசிக் கொண்டிருப்போம் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் தனியார் திருமுண மண்டபத்தில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., தலைமை வகித்தார். மாநில திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் திமுகவைப் பொறுத்தவரை சார்பணிக்கு தனி இடம் உண்டு. கட்சித் தலைவர் அறிவுறுத்தல்படி, தமிழகம் முழுவதும், சார்பு அணியினரை சந்தித்து வருகிறேன். கட்சியை சார்ந்து சார்பணி இல்லை. சார்பணியை கட்சி சார்ந்திருக்கும் சூழ்நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும். 23 சார்பணி 25 சார்பணியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகள் அணியும், கல்வியாளர்கள் அணியும் திமுகவில் மட்டும் தான் உள்ளது. சார்பணியினர் நினைத்தால் சாதனை படைக்கும் அணியாக மாறலாம். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கட்சியின் மாணவரணி தவிர்த்து பேச இயலாது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் சார்பணியினர் தனிப்பட்ட முறையில் 200 வாக்குகளை வைத்திருந்தீர்கள் என்றால் உங்களை யாராலும் தவிர்க்க இயலாது.
அரசின் திட்டங்களை தெருமுனைப் பிரச்சாரம் மூலம் மக்களிடம் கொண்டு சேருங்கள். திண்ணைப் பிரச்சாரம் செய்யுங்கள். சோஷியல் மீடியாக்களில் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சிறப்பாக செயல்படுங்கள். மக்களின் பிரச்சினைகளை காது கொடுத்து கேளுங்கள். நிர்வாகிகளுக்குள் சிறு சிறு பிரச்சினைகள் இருக்கலாம். அதை தவிர்த்து 2026ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள். புதிய வாக்காளர்களை கட்சியின் ஆதரவாளர்களாக மாற்றும் வகையில் செயல்படுங்கள். அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளனர். அதனால் நம் பணி எளிதாகிவிட்டது என நினைக்கக் கூடாது. திமுக தலைமையிலான ஆட்சிக்கு பல முனைகளில் மத்திய பாஜ அரசு இடையூறு செய்து வருகிறது. புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தியைக் கொண்டு வர முயற்சி செய்கின்றனர். நல்லவேளை திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் உள்ளது.
ஒரு வேளை அதிமுக ஆட்சி அமைந்திருந்தால், தமிழகத்தில் பாதிபேர் இந்தியில் பேசிக் கொண்டிருப்பார்கள். அந்த நிலைமையை இபிஎஸ் உருவாக்கியிருப்பார். அவரே டில்லி சென்று புதிய கல்விக் கொள்கையை ஏற்பதாக கையெழுத்து போட்டு கொடுத்திருப்பார். இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் மத்திய அரசு திணிக்க முயற்சிக்கின்றனர். பார்லி. தொகுதி மறுவரை செய்தால் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதி எண்ணிக்கை 31 ஆக குறையும். 8 தொகுதிகளை இழக்க நேரிடும். அனைவரும் சிறப்பாக செயல்பட்டால் சார்பணிக்கான முக்கியத்துவத்தை தலைவர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
நிகழ்ச்சியில், தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மூர்த்தி, ஈரோடு எம்.பி., பிரகாஷ், எம்எல்ஏக்கள் பொன்னுசாமி, ராமலிங்கம், மாநில இளைஞரணி அமைப்பாளர்கள் ஆனந்த், சீனிவாசன் மற்றும் அனைத்து சார்பு அணிகளின் மாவட்ட, நகர ஒன்றிய, டவுன் பஞ்சாயத்து நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.




