Close
மார்ச் 7, 2026 6:04 மணி

பேங்க் மேனேஜரை ஏமாற்றி திருமணம் செய்த போலி சப் கலெக்டரை கஸ்டடி எடுத்து போலீசார் விசாரணை..!

தன்வர்த்தினி

நாமக்கல் :

சப்-கலெக்டராக பணி புரிவதாக கூறி, பேங்க் மேனேஜரை ஏமாற்றி திருமணம் செய்த, பெண்ணை போலீசார் சிறையில் இருந்து கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செங்கோடு தாலுகா, பெரியமணலி அடுத்த குளத்துக்காட்டை சேர்ந்தவர் நவீன்குமார் (29). இவர், வரகூராம்பட்டியில் உள்ள அரசு பேங்க் ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், நாமக்கல் ராமாபுரம்புதூரைச் சேர்ந்த தன்வர்த்தினி (27) என்பவருக்கும், 2024 ஜூன், 12ல், வையப்பமலையில் திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது, பொள்ளாச்சியில் சப்-கலெக்டராக (ஆர்.டி.ஓ.) பணியாற்றுவதாக, தன்வர்த்தினி தெரிவித்துள்ளார். ஆனால், தன்வர்த்தினி பொள்ளாச்சியில் சப்-கலெக்டராக இல்லை என்பதுதிருமணம் முடிந்த சில மாதங்களில் தெரியவந்தது. அதனால், நவீன்குமார் மற்றும் அவரது பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதில், தன்வர்த்தினி பி.இ., படித்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு எழுதி உள்ளார் என்பது மட்டு தெரியவந்தது. ஆனால், அரசு பணிக்கு அவர் செல்லவில்லை என்பதை நவீன்குமார் மற்றும் அவரது பெற்றோர்கள் தெரிந்து கொண்டனர்.

மேலும், தன்வர்த்தினியிடம் இருந்த பணி நியமன உத்தரவு, அரசு அடையாள அட்டை அனைத்தும் போலி என்பதால், இது குறித்து, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில், நவீன்குமார் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, கடந்த, 26ம் தேதி, தன்வர்த்தினியை கைது செய்து, கோர்ட் உத்தரவின்பேரில், சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

அதையடுத்து, பொள்ளாச்சியில் தன்வர்த்தினி குடியிருந்து வந்த வாடகை வீட்டில் ஆய்வு செய்த போலீசார், அங்கிருந்த, தன்வர்த்தினி பயன்படுத்திய லேப்டாப், மெமரிகார்டு, மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். லேப்டாப் பாஸ்வேர்டு போலீசாருக்கு தெரியாததால், அதை ஓபன் செய்யமுடியவில்லை.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தவேண்டியுள்ளதால், அவரை கஸ்டடி எடுத்து விசாரிக்க, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு செய்தனர். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் செகனாபானு, 2 நாட்கள் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சவீதா தலைமையிலான போலீசார், தன்வர்த்தினியை கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தன்வர்த்தினி அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் வாங்கியதாக தெரிகிறது.

மேலும், தன்வர்த்தினிக்கு உதவியாக அவருடன் பள்ளி, கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் இருந்ததாகவும், இந்த வழக்கில் புகார் கொடுத்த அவரது கணவர் நவீன்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்தும் போலீசார் தன்வர்த்தினியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த மோசடியில் தொடர்புடைய முன்னாள் மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில், இந்த வழக்கில் இருந்து தன்னை ஜாமினில் விடுக்கக்கோரி தன்வர்த்தினி, வக்கீல்கள் மூலம் தாக்கல் செய்த மனுவை, நாமக்கல் ஜேஎம்1 கோர்ட் மாஜிஸ்திரேட் செகனாபானு, முன்தினம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top