Close
ஏப்ரல் 24, 2026 4:01 காலை

பழனியில் மாலிப்டினம் சுரங்கம் :மத்திய அரசை எதிர்த்து போராட்டம் -கொங்கு ஈஸ்வரன் அறிவிப்பு 

கொமதேக பொதுச் செயலாளர், இ.ஆர்.ஈஸ்வரன், எம்எல்ஏ.,

நாமக்கல் :

பழனிமலையில் மத்திய அரசு மாலிப்டினம் சுரங்கம் தோண்டினால், முருக பக்தர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம் என கொமதேக பொதுசெயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மதுரை மாவட்டம் அழகர்மலை, அரிட்டாப்பட்டி போன்று, திண்டுக்கல் மாவட்டம், பழனி மலை பகுதியில், மத்திய புவியியல் துறை மூலம் மாலிப்டினம் என்ற உலோகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதை சுரங்கம் தோண்டி எடுப்பதால் பழனி மலை பகுதிகள் அனைத்தும் அழிந்து போகும். பழனி மலையின் மீதும் அங்குள்ள முருகன் மீதும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரும் மிகுந்த பற்று வைத்துள்ளனர்.

அரிட்டாப்பட்டியை போன்றே இந்த பகுதிகளிலும் சமண படுகைகளும், மிகப்பெரிய பல்லுயிர் தளங்களும் இருக்கின்றன. அங்கு சுரங்கம் தோண்டினால் பழனி மலை மற்றும் இடும்பன் மலை, ஐவர் மலை, நெய்க்காரப்பட்டி, கரடிக்குட்டம், சத்திரப்பட்டி ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும். தமிழகத்தில் உள்ள பல்வேறு மலைப்பகுதிகளை குறி வைத்து அழிக்க முயற்சிப்பதையும் பிறகு மக்கள் கொந்தளித்து போராட்டம் நடத்திய பின் அதை கைவிடுவதையும் மத்திய அரசு வாடிக்கையாக வைத்துள்ளது.

மதுரையில் முருகன் மாநாடு நடத்துபவர்கள் பழனியில் முருகன் கோயிலில் சுரங்கம் தோண்ட நினைப்பது தவறு. இந்த விசயத்தில் எக்காரணத்தைக் கொண்டும் நாம் கவன குறைவாக இருந்து விடக்கூடாது. மாலிப்டினம் உலோக சுரங்கம் சம்பந்தமாக மத்திய அரசு முன்னெடுப்புகளை தொடர்ந்து செய்தால், முருக பக்தர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம். மேலும் பழனிமலையில் சுரங்கம் தோண்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top