நாமக்கல்:
பரமத்தி வேலூர் அருகே திருமண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த பெண் மற்றும் புரோக்கர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வேலூர் தாலுகா, வடகரையாத்தூரைச் சேர்ந்தவர் சிவசண்முகம் (35). இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். தொடர்ந்து 2ம் திருமணம் செய்ய பரமத்தி வேலூர் அருகே திடுமல் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி (45) என்ற கல்யாண புரோக்கரை தொடர்பு கொண்டுள்ளார். அவர் வெளி மாவட்டத்திலிருந்து பெண் பார்த்து தருவதாக கூறி சிலரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
மேலும், கமிஷன் முன்பணமாக ரூ. 1.20 லட்சம் வாங்கியுள்ளார். தொடர்ந்து அவரது ஏற்பாட்டின் பேரில் கடந்த 7ம் தேதி மதுரை சிந்தாமணி வாழைத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜோதி (எ) ஜோதிலட்சுமி (23) என்ற பெண்ணை சிவசண்முகத்திற்கு திருமணம் செய்து வைத்தனர்.
இந்த நிலையில் திருமணம் முடிந்த மறுநாள் ஜோதிலட்சுமி யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதில் மனமுடைந்த சிவசண்முகம் கடந்த 10ம் தேதி நல்லூர் அருகே உள்ள அவரது சகோதரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச் சம்பவம் தொடர்பாக நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசரணை நடத்தினார்கள்.
விசாரணையில் ஜோதிலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதை மறைத்து திருமண புரோக்கர்கள் மூலம் சிவசண்முகம் போன்ற நபர்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, மறுநாள் வீட்டில் உள்ள நகை, பணத்துடன் தப்பி தலைமறைவாவது அவரது வாடிக்கை என தெரியவந்தது. இதையடுத்து வழக்கில் தொடர்புடைய ஜோதிலட்சுமி மற்றும் திருமண புரோக்கர்களான தமிழ்ச்செல்வி, விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த கஸ்தூரிபாண்டி (38), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் (55), சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (45), திருச்சியைச் சேர்ந்த சங்கர் (எ) நாராயணன் (56) ஆகிய 6 பேரை நல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் செய்து வைப்பதாக கூறி ஏமாற்றுவோர் மீது, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாமக்கல் போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் எச்சரித்துள்ளார்.




