நாமக்கல் :
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு, 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என, ராஜ்யசபா எம்.பி., ராஜேஸ்குமார் கூறினார்.
தமிழகம் முழுவதும், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமை, முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று சிதம்பரத்தில் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி வைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம், துவக்க விழா மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னமுதலைப்பட்டி சமுதாயக் கூடத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார்.
எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி, டி.ஆர்.ஓ. சுமன், கமிஷனர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜ்யசபா எம்.பி., ராஜேஸ்குமார் முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது, முகாமில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் உடனடியாக தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு, உதவித்தொகை, மருத்துவ இன்சூரன்ஸ் அடையாள அட்டை, வருமானம் மற்றும் இருப்பிடம் சான்றுகளை மற்றும் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்களின் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் திட்டமான உங்களுடன் ஸ்டாலின், திட்டத்தை, தமிழக முதல்வர் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் துவங்கி வைத்துள்ளார். அதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில், இன்று 6 இடங்களில் இந்த முகாம் நடக்கிறது. இம்முகாம், வரும், செப்., 30 வரை தொடர்ந்து நடைபெறும். ஒரு மணி நேரத்தில், 60க்கும் மேற்பட்ட மனுக்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
முகாம் குறித்து பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும், ஆதரவும் உள்ளது.
மகளிர் உரிமை தொகை பெறும் கவுன்ட்டரில், 200க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். முகாமில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். முழுமையான விசாரணைக்கு பின், தகுதியான நபர்களுக்கு, 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார். மாநகராட்சி துணை மேயர் பூபதி, சமூகப்பாதுகாப்புத்திட்ட சப் கலெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




